டி.என்.பி.சி உறுப்பினர்கள் நியமனம் செல்லுமா, செல்லாதா? ஹைகோர்ட்டில் இன்று விசாரணை
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு உறுப்பினர்களை நியமித்தது செல்லாது என்று அறிவிக்க கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்துக்கு (டி.என்.பி.எஸ்.சி.) 11 உறுப்பினர்களை நியமித்து தமிழக அரசு அண்மையில் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உறுப்பினர்கள் ஆளும் கட்சி ஆதரவாளர்கள் என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளன.
எனவே, நியமனத்தை தடை செய்ய வலியுறுத்தி திமுக நிர்வாகி, டி.கே.எஸ்.இளங்கோவன் சார்பில் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக கருதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவேண்டும் என்று இளங்கோவன் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் வில்சன் கோரிக்கைவிடுத்தார்.
இந்த உறுப்பினர்கள், இப்பதவியை பெற போதிய தகுதியை பெற்றிருக்கவில்லை. ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் என்ற ஒரே தகுதியின் அடிப்படையில் அவர்களை தமிழக அரசு நியமித்துள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக கருதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவேண்டும் என்று வில்சன் கோரிக்கை வைத்தார்.
ஆனால் நீதிபதி சுப்பையாவோ, 'இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது. நீங்கள் வழக்கு மனுவை தாக்கல் செய்யுங்கள், நாளை அதாவது (இன்று) இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறேன்' என்று உத்தரவிட்டார்.
இதே பிரச்சினை தொடர்பாக, வக்கீல் சமூக நீதிப்பேரவை சார்பில் அதன் தலைவர் கே.பாலு, ஹைகோர்ட்டில், ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு தமிழக அரசு 11 உறுப்பினர்களை நியமித்த நிலையில் அதில், பெண்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. கல்வியாளர்கள் உள்ளிட்டோருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள், அரசியல் பின்னணி கொண்டவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த நியமனத்தை ரத்து செய்யவேண்டும். இவர்களை நியமித்து கடந்த 31ம் தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யவேண்டும். அந்த அரசாசணைக்கு இடைக்கால தடை விதிக்கவேண்டும். மேலும், உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டவர்கள், அப்பதவியை வகிக்க தடை விதிக்கவேண்டும்' என்று கூறியிருந்தார். இந்த மனுவும் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.