ராணிப்பேட்டை காவல் நிலையம் மீது நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீச்சு! மர்ம நபர்கள் யார்? போலீஸ் விசாரணை
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் காவல் நிலையம் மீது நள்ளிரவில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியோடி உள்ளனர். பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் காவல் நிலையம் மீது நள்ளிரவில் மர்ம நபர்கள் 2 பேர் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நள்ளிரவு நேரத்தில் காவல் நிலையத்திற்கு 2 பேர் மோட்டார் சைக்கிளில் வருகை தந்தனர். அவர்கள் மோட்டார் சைக்கிளை காவல் நிலையம் முன்பு நிறுத்திவிட்டு, ஒரு 50 அடி தூரம் நடந்து வந்தனர்.

அப்போது அவர்கள் இருவரும் முகமூடி அணிந்து இருந்தனர். திடீரென தாங்கள் வைத்திருந்த பெட்ரோல் குண்டை எடுத்து காவல் நிலையத்தின் மீது வீசினர். பின்னர் அங்கிருந்து வேகமாக ஓடி, மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு தப்பி சென்றனர். நள்ளிரவு நேரத்தில் காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டது.
அதன்பேரில் உயர் அதிகாரிகள் காவல் நிலையத்திற்கு வந்து சோதனை நடத்தினர். தொடர்ந்து காவல் நிலையம் முன்பு உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் முகமூடி அணிந்தபடி வந்த இரண்டு பேர் தான் காவல் நிலையம் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய காட்சிகள் பதிவாகியிருந்தது. சிசிடிவி காட்சிகளை வைத்து அவர்கள் இருவரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
முகமூடி அணிந்து வந்த நபர்கள் யார்? எதற்காக இந்த செயலில் ஈடுபட்டனர்? என்பது தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும் வியாபாரிகளை குறிவைத்து பணம் கேட்டு மிரட்டும் கும்பலால் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications