பெட்ரோல், டீசல் விலை உயர்வில் காங்கிரசை பின்பற்றும் பாஜக: ஜெ., வைகோ கண்டனம்
சென்னை: பெட்ரோல், டீசல் உயர்வை உடனே திரும்ப பெறவேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்த விலை நிர்ணய அதிகாரத்தை திரும்ப பெற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இதேபோல பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இ.கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முத்தரசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஜெயலலிதா கண்டனம்
பெட்ரோல் டீசல் விலை நிர்ணய அதிகாரம் மத்திய அரசிடம் இருக்க வேண்டும் என்று ஜெயலலிதா கருத்து தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வால் ஏழை எளிய மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்பை ஏற்படுத்தும். காங்கிரஸ் கூட்டணி அரசு கடைபிடித்த தவறான கொள்கையை பாஜக அரசும் பின்பற்றுகிறது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஏழைகளை பாதிக்கும் - வைகோ
பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏழை, எளிய நடுத்தர மக்களை பாதிக்கும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறி உள்ளார். ''இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக மே மாதத்தில் இரண்டாவது முறையாக பெட்ரோல், டீசல் விலைகளை மாற்றி அமைத்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறுகின்றன.

பாஜக அரசின் சாதனை
பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்தபோது பெட்ரோல், டீசல் விலைகளைக் குறைப்பதாக பா.ஜ.க. அரசு நாடகம் ஆடியது. ஆனால், கடந்த ஓராண்டில் பெட்ரோல் விலையை 15 ரூபாய் 05 காசும், டீசல் விலையை 11 ரூபாய் 15 காசும் உயர்த்தி இருப்பதுதான் பா.ஜ.க. அரசின் சாதனை ஆகும்.

திரும்ப பெறுக
மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியையும் உயர்த்தி மக்கள் மீது அதிக சுமையை ஏற்றி உள்ளது. இதனால் விலைவாசி மேலும் அதிகரிப்பதுடன், சாதாரண ஏழை எளிய நடுத்தர மக்களும் பாதிப்புக்கு உள்ளாவர்கள். எனவே மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று வைகோ கூறி உள்ளார்.

இ.கம்யூனிஸ்ட் முத்தரசன்
இதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்த பின்னர் 42 சதவிகிதம் விலைவாசி உயர்ந்துள்ளது என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த சூழலில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியிருப்பது மேலும் விலைவாசி உயர வழிவகுக்கும்.

இ.கம்யூனிஸ்ட் கண்டனம்
இந்த விலை உயர்வு தனியார் பெட்ரோலிய நிறுவனங்களின் லாபக் கொள்ளைக்கு வழி வகுப்பதோடு அனைத்து பொருட்களின் விலை உயர்வுக்கும் வழிகோலும். எனவே,இந்த விலை உயர்வை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது என்று இரா.முத்தரசன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications