எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற கூட்டத்தில் பெட்ரோல் பாக்கெட்டுகள் வீச்சு.. சேலத்தில் பரபரப்பு
சேலம்: தமிழக பொதுப்பணிகள், நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் பெட்ரோல் பாக்கெட்டுகளை வீசிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பகுதியில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு பேசி கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த நபர் ஒருவர் தான் வைத்திருந்த பெட்ரோல் பாக்கெட்டுகளை மேடை மீது வீசினார். அந்த பாக்கெட் மேடை முன்பு வைக்கப்பட்டிருந்த (ஆம்ப்ளிஃபியர்) மீது விழுந்து தீப்பற்றியது.
உடனடியாக அங்கு கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். இதனால் அங்கு அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் அந்த நபரை சுற்றி வளைத்து கைது செய்தனர். இதையடுத்து காவல்துறையினர் அறிவுறுத்தலின் பேரில் அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி கூட்டத்தை பாதியிலேயே முடித்துவிட்டு புறப்பட்டார்.
கைதான நபரிடம் இந்த சம்பவத்திற்கான பின்னணி குறித்து ஜலகண்டாபுரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் அவர் பெயர் ஆனந்தகுமார் என்பது தெரியவந்தது. ஆளும் கட்சி பொதுக்கூட்டத்தில் பெட்ரோல் பாக்கெட்டுகள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.