ஓ. பன்னீர்செல்வத்துக்கு பெருகும் ஆதரவு- பி.எச் பாண்டியன், கே.பி. முனுசாமி நேரில் சந்திப்பு!
முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு அதிமுகவில் ஆதரவு அதிகரித்து வருகிறது. அதிமுக மூத்த தலைவர்கள் பி.எச். பாண்டியன், கே.பி. முனுசாமி ஆகியோரும் ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
சென்னை: தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் மத்தியில் ஆதரவு விஸ்வரூபமெடுத்து வருகிறது. முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன், முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி உள்ளிட்டோர் ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
முதல்வர் பதவியில் இருந்து தாம் கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைக்கப்பட்டதாக ஓ. பன்னீர்செல்வம் நேற்று இரவு அதிரடி தகவலை வெளியிட்டார். இதனால் தமிழக முதல்வராகும் சசிகலாவின் கனவில் பேரிடி விழுந்தது.
அத்துடன் சசிகலா தொடர்பாக தாம் 10 சதவீதம் மட்டுமே தெரிவித்திருக்கிறேன் என கூறியும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் ஓ. பன்னீர்செல்வம். இதனால் அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார்.
சசிகலாவுக்கு எதிரான ஓ. பன்னீர்செல்வத்தின் இந்த முடிவு தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பை கொடுத்துள்ளது. அதிமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் சிலர் ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
இந்த நிலையில் சசிகலாவுக்கு எதிராக பகிரங்கமாக போர்க்கொடி தூக்கிய முன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன், முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி உள்ளிட்டோரும் ஓ. பன்னீர்செல்வத்தை இன்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பி.எச். பாண்டியன், முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை நாம்தான் பாதுகாக்க வேண்டும். இன்னும் பல மர்மங்கள் விரைவில் வெளியாகும் என்றார்.