வெள்ளியங்கிரி மலையில் காணாமல் போன இளைஞர் சடலம் மீட்பு
கோயம்புத்தூர்: கோவையை அடுத்த வெள்ளியங்கிரி மலைக்கு யாத்திரை சென்று காணாமல் போன இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சேலம் கன்னங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த மணி உள்ளிட்ட 17 பேர் வெள்ளியங்கிரி மலைக்கு யாத்திரை சென்றனர். வெள்ளியங்கிரியில் 6 மலைகளைக் கடந்து 7 வது மலையில் சுயம்புவாக வீற்றிருக்கும் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிப்பதுதான் யாத்திரையின் நோக்கம்.
அப்படி 17 பேரும் 7வது மலையில் உள்ள வெள்ளியங்கிரி சுவாமியை தரிசித்துவிட்டு கீழே இறங்கிக் கொண்டிருந்தனர். அங்கு கடும் குளிரும், பனிப்பொழிவும் அதிகமாக இருந்ததால் அவர்கள் கீழே இறங்க மிகவும் போராடினர்.
6வது மலையில் இருந்து ஞாயிற்றுக்கிழமையன்று இறங்கிக் கொண்டிருந்தபோது அக்குழுவில் இடம்பெற்றிருந்த மணி என்பவர் மிகவும் சோர்வடைந்து மயக்கமடைந்தார். பின்னர் உடல் பலவீனமடைந்த நிலையில் மெதுவாக அவர் மட்டும் நடந்து வந்தார். மற்றவர்கள் வேகமாக கீழே வந்துவிட்டனர்.
ஆனால் மணி அடிவாரத்துக்கு வந்து சேராததால் இது குறித்து வனத்துறை மற்றும் போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டது. அவர்கள் வனப்பகுதியில் தேடிய போது 6வது மலையிலேயே மணி உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. அவரது சடலம் மீட்கப்பட்டு கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆலாந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.