இன்று மகாளய அமாவாசை: ராமேஸ்வரம், கன்னியாகுமரியில் முன்னோர்களுக்கு வழிபாடு
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம், கன்னியாகுமரி, வேதாரண்யம், திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் உள்ளிட்ட புண்ணிய தலங்களில் உள்ள கடல்கள், ஆறு, குளங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து மக்கள் வழிபாடு நடத்தினர்.
சூரியன் கன்னி ராசிக்கு செல்லும் புரட்டாசி மாதம், எமதர்மராஜன் பிதுர்க்களை பூமிக்கு அனுப்புவதாக ஐதீகம். அந்த நேரத்தில் நமது முன்னோர்களும் இறந்து போன ரத்த சம்பந்த உறவுகளும் அந்தந்த உறவினரை-குடும்பத்தினரை காண ஆசையுடனும், மகிழ்ச்சியுடனும் காண வருவார்கள். அந்த நேரத்தில் அவர்களை நாம் வணங்கினால் மனமகிழ்சியோடு ஆசீர்வாதம் செய்வார்கள். புரட்டாசி மாதம் பிரதமை முதல் அமாவாசை வரையிலான 15 நாட்கள் மகாளய பட்சம் எனப்படுகிறது. இந்த நாட்களில் நம் முன்னோர்கள் பூமிக்கு வந்து நம் பிரார்த்தனைகளை ஏற்றுக்கொள்வதாக ஐதீகம். மகாளய பட்சத்தில் வரும் அமாவாசையன்று முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வது சிறப்பாகும்.

முன்னோர்களுக்கு திதி
இன்று மகாளய அமாவாசை என்பதால் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல், கன்னியாகுமரி முக்கடல் சங்கமம், திருச்செந்தூர் கடல், பவானி கூடுதுறை, திருச்சி காவிரி ஆறு, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, திருவையாறு உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து புனித நீராடி திதி கொடுத்தனர்.
சென்னையில் தர்பணம்
சென்னை மெரினா கடற்கரை, மயிலை கபாலீஸ்வரர் கோயில் குளம், திருவள்ளூர் வீரராகவர் கோயில் குளம், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில், மதுராந்தகம் கோதண்டராமர் கோயில் குளம், மாமல்லபுரம் புண்டரீக புஷ்கரணி குளம் உள்பட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் ஏராளமானோர் திதி கொடுத்து வழிபாடு நடத்தினர். மகாளய அமாவாசையை முன்னிட்டு வாழை இலை, தேங்காய், வாழைப்பழம், பூ, வாழைக்காய் விற்பனை களைகட்டியது.
அன்னதானம்
மகாளய அமாவாசை நாள். முன்னோர்களை திருப்தி செய்யும் வகையில் தர்ப்பணம் செய்ய வேண்டியது அவசியம். இந்நாளில் தீர்த்தத்தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து, அவர்களது தாகம் தீர்க்க வேண்டும். இந்த புண்ணிய தினங்களில் பித்ருக்கள் வழிபாடு மிகச் சிறந்த பலனை கொடுக்கும். எள் தானம் கோடி புண்ணியத்தை தரும் என்கிறது சாஸ்திரம். கருடபுராணம், விஷ்ணு புராணம் போன்ற புராணங்களில், ஒருவருக்காவது அன்னதானம் செய்ய வேண்டும், முடியாதவர்கள் காகத்திற்கு அன்னம் வைக்கலாம், பசுவுக்கு அகத்திகீரை, பழங்கள் கொடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னோர்கள் வழிபாடு
நாம் தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் செய்யும் போது ஐந்து பிதுர் தேவதைகளை வரவேற்கின்றோம். நம் பித்ருக்கள் (மண்), புரூரவர் (நீர்), விசுவதேவர் (நெருப்பு), அஸீருத்வர் (காற்று), ஆதித்யர் (ஆகாயம்) என பஞ்ச பூத அம்சமாக ஐவரும் ஒரு சேர பூமிக்கு வருவது மகாளய பட்சத்தில் தான் என கருட புராணம் விளக்கமாக கூறுகின்றது. திரேதா யுகத்திலும், கிருதாயுகத்திலும் மகாளய பட்ச நாட்களில் மூதாதையர்கள் நேரில் தரிசனம் தந்து உணவு பெற்று வாழ்த்தி சென்றதாக புராணங்கள் கூறுகின்றன
மகாளய அமாவாசை
சாதாரண அமாவாசையிலும், நினைவு நாட்களிலும் நாம் தரும் திதி சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் தருவது. ஆனால் மகாளய பட்சத்தின் வழிபாடும், மகாளய அமாவாசை அன்று நாம் செய்யும் பூஜையும் நம்மீது அக்கறை கொண்டு உதவியவர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், குருமார்கள், இப்பூவுலகில் சாஸ்திர உணர்வு பெற, வாழ்வியல் தெளிவு பெற நமக்கு உதவிய அத்துனை ஆன்மாக்களையும் மகிழ்ச்சி அடையச் செய்கிறது. எனவே அத்தனை பித்ருக்களும் ஆசி வழங்குவது இந்த மகாளய பட்ச விரத நாட்களில் தான்.
தானம் செய்யுங்கள்
மறைந்த நண்பர்கள், தாய் வழி, தந்தை வழி உறவினர்கள் சித்தப்பா, பெரியப்பா முதல் தங்கள் குடும்பத்திற்கு உதவிய அத்தனை ஆன்மாக்களுக்கும் என வேண்டி மகாளய அமாவாசை அன்று குறைந்தது ஒரு ஜோடி ஆண்-பெண் முதியவர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் நீங்கள் வஸ்திர தானம் செய்து உணவளித்து செலவுக்கு கொஞ்சம் பணமும் கொடுத்து உதவினால் வாழ்வும், வம்சமும் சிறக்கும்.
பசுவிற்கு அகத்திக் கீரை
மகாளய அமாவாசையில் பால், தயிர், நெய், தேன், பழங்களை நிவேதனமாக வைக்கலாம். பலகாரம், சாதவகைகளையும் படையல் செய்யலாம். வசதி குறைந்துள்ளவர்கள் மூதாதயரை மனதில் நினைத்து அகத்திக் கீரையை பசு மாட்டிற்கு உணவாகத் தந்தாலே போதும் முதியவர்கள் இருவருக்காவது உணவும், ஆதரவற்றவர்களுக்கு துணிமணியும் வயிறார உணவளிக்க வேண்டும்.
எள் தானம்
மகாளய அமாவாசையன்று புரோகிதர்களுக்கு எள் தானம் தருவது சிறப்பாகும். சனீஸ்வரனுக்கு எள் விளக்கு ஏற்றி வணங்கலாம். ஏழை, எளியோர், இல்லாதோர், இயலாதோருக்கு ஆடை, போர்வை, துண்டு போன்றவற்றை வாங்கித் தரலாம். வீட்டு வேலை செய்யும் பெண்கள், ஏழை பெண்களுக்கு நல்லெண்ணெய் தானம் செய்யலாம். முன்னோர்களை நினைத்து காகத்துக்கு உணவு வைக்கலாம். யானைக்கு கரும்பு, பழவகைகள், சர்க்கரை பொங்கல் அளிப்பதால் பாவ தோஷங்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.
புண்ணிய கபரியம்
நம்மை பெற்று, வளர்த்து ஆளாக்கி மறைந்த தாய், தந்தையரையும் முன்னோர்களையும் நினைத்து, அவர்கள் செய்த நல்ல காரியங்களையும் நம்மை ஆளாக்குவதற்கு அவர்கள் பட்ட சிரமங்களையும் ஒவ்வொரு அமாவாசையும் நினைவுகூர்ந்து தர்ப்பண சடங்கு நிறைவேற்றுவது மிகவும் புண்ணிய காரியமாக சொல்லப்படுகிறது.
முன்னோர்கள் ஆசி
அமாவாசையில் குல மூதாதையர்களை நினைத்து செய்யும் தான தர்மங்கள் அவர்களை சந்தோஷப்படுத்துவதுடன் நோய் நொடிகள் அகலும், நீண்ட ஆயுளும், நிறைந்த செல்வமும், மங்காத புகழும் அமையும். இப் பூஜையால் தீராத கடன் ஒழியும். தீர்க்க முடியாத வியாதிகள் குறையும். யார் விட்ட சாபமோ என அஞ்சிய வாழ்க்கை அகலும் என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். நாமும் நம்முன்னோர்களுக்கு மகாளய அமாவசை தினத்தன்று பூஜை செய்து அவர்களின் ஆசி பெறுவோம்.












Click it and Unblock the Notifications