2016... களம் காண்போம் வா.. ரஜினியை மீண்டும் அழைக்கும் ரசிகர்கள்!
மதுரை: நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் ஒட்டியுள்ள போஸ்டர்களில் அரசியலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். 1996 ஆம் ஆண்டில் இருந்து அழைப்பு விடுத்தோம் வரவில்லை. 2016ஆம் ஆண்டிலாவது வா தலைவா என்கிற ரீதியில் மதுரையில் கலக்கலாக போஸ்டர் ஒட்டியுள்ளனர் ரசிகர்கள்.
25 ஆண்டுகளுக்கு முன்பே நடித்தது போது இமயமலைக்குப் போகிறேன் என்று கூறி ரசிகர்களை அலரவைத்தவர் ரஜினிகாந்த், அண்ணாமலை படத்தில் இருந்தே அரசியல் வசனங்கள் ரஜினி படங்களில் இடம் பெறத் தவறியதில்லை.
ஒவ்வொரு முறையும் படம் வெளியாகும் போது பஞ்ச் வசனங்கள் பட்டையை கிளப்பும். ஆனால் அரசியல் குறித்து மட்டும் ரஜினி முடிவே எடுக்காமல் இருந்து வருகிறார்.
தேர்தல் நேரத்தில் ‘வாய்ஸ்' கொடுத்த ரஜினிகாந்த் இப்போது ஓட்டு மட்டும் போட்டு தனது ஜனநாயகக் கடமையை செவ்வனே செய்கிறார். ஆனாலும் ரஜினியை அரசியலுக்கு இழுக்க ரசிகர்கள் மட்டுமல்லாது அரசியல் கட்சியினரும் போட்டு அழைப்பு விடுக்கின்றனர்.

மதுரை சூரப்புலிகள்
போஸ்டர் ஒட்டுவதில் மதுரைக்காரர்களை யாரும் மிஞ்சமுடியாது. கடந்த 20 ஆண்டுகளாகவே ரஜினியை தமிழக முதல்வராக வரச்சொல்லியே போஸ்டர் அடித்து வருகின்றனர்.
இன்றைக்கு திரையுலகமுதல்வர்... நீ மனது வைத்தால் நாளை தமிழக முதல்வர்' என்கிறது ஒரு போஸ்டர்.

எப்பவுமே ராஜா
ஒரு கோட்டை இல்லை கொடியும் இல்லை எப்பவும் இவர்தான் ராஜா என்கிறது மற்றொரு போஸ்டர். அந்த போஸ்டரில் நடிகர் விஜய் சேதுபதியும், சிவகார்த்திக்கேயனும் இணைந்து சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் ரஜினிக்கு சாமரம் வீசிக்கொண்டிருக்கின்றனர்.

96ஆரைப்போல 16ஆரையும்
இளமையான ரஜினியின் படம் போட்டு அதில் ‘ இது மீண்டும் திரும்பாது...அதுபோல உன்மீது கொண்ட அன்போ எதற்காகவும் மாறாது! இது வயதுக்கு மட்டுமல்ல... வாய்ப்புகளுக்கும்தான். அன்பு சகோதரனே! 96ஐப்போல 16ஐயும் வீணாக்கிவிடாதே! இறைவன் உன்னை படைத்ததற்கும் மீண்டும் உன்னை திருப்பி கொடுத்ததற்கும் விடை என்ன? என்ற வாசகம் ரஜினியை உசுப்பேற்றும் விதமாக ஒட்டப்பட்டுள்ளது.

இரண்டாம் பென்னிகுக்
மற்றொரு போஸ்டரிலோ, விவசாயிகள் நேசிக்கும் இரண்டாம் பென்னிகுக்கே என்று கூறப்பட்டுள்ளது. ‘நாளைய தமிழக தலைவரே... 2016 உன்கையில்... களம் காண்போம் வா! என்று அழைக்கிறது.

ரஜினி ரசிகர்கள் கட்சி
தமிழக தலைமைச் செயலகம் பின்னணியில், கண் இமைக்கும் நொடியில் ஒரு மாற்றம் இருக்கிறது. அதற்கு தமிழகமே காத்திருக்கிறது தலைவா! என்கிறது ஒரு போஸ்டர். அதைவிட திருப்பூரில் வெறும் போஸ்டரோடு மட்டுமல்லாது ரஜினி ரசிகர்கள் கட்சியே தொடங்கப்போவதாக அறிவித்துள்ளனர்.

பச்சை கொடி காட்டுவாரா?
ரஜினியின் படம் ரிலீஸ்ஆகும் போதும் அவரது ஒவ்வொரு பிறந்தநாளின்போதும்... அரசியலுக்கு அழைக்கும் போஸ்டர்களை ஒட்டுவது ரசிகர்களின் வாடிக்கையாகிவிட்டது. எங்களின் குமுறல்களையும், எதிர்பார்ப்புகளையும் போஸ்டர்கள் மூலமாக கொட்டி தீர்த்துவிடுகிறோம். தலைவர்தான் பச்சைக்கொடி காட்டவேண்டும் என்கின்றனர் ரசிகர்கள்.
அவர்களுக்கு ரஜினி என்ன சொல்லப்போகிறார்?












Click it and Unblock the Notifications