அரூர்: ஆசிரியரின் பாலியல் தொல்லையால் ப்ளஸ் டூ மாணவி தற்கொலை
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் அரூரில் பனிரெண்டாம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரூர் அருகே அனுமன்தீர்த்தம் பகுதியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மாணவியின் வீட்டை பரிசோதனை செய்த போலீசார், தற்கொலைக்கு முன்பாக மாணவி எழுதிவைத்த கடிதத்தைக் கைப்பற்றினர்.
அந்த கடிதத்தில் உடற்கல்வி ஆசிரியரின் பாலியல் தொல்லை அதிகரித்து வருவதாகவும், மனஉளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாகவும் எழுதப்பட்டிருந்தது. இதனையடுத்து போலீசார் பள்ளிக்கு சென்று உடற்கல்வி ஆசிரியரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பது அதிகரித்து வருகிறது.
கடந்த அக்டோபர் மாதம் வேலூர் அருகே அரசு பள்ளியில் 4ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் தொடர்பாக தலைமை ஆசிரியர் உட்பட இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பு ஒன்றியம், தம்பிபட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவி தங்கம்மாள் (14) பயிற்சி ஆசிரியரின் பாலியல் தொல்லையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
மாணவிகள் மட்டுமல்லாது ஆசிரியைகளே தலைமை ஆசிரியருக்கு எதிராக பாலியல் புகார் கொடுத்துள்ளனர். கொளத்தூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஏ.சாந்தி, கே.சி.கவிதா உள்பட ஏழு ஆசிரியைகள் தலைமை ஆசிரியரின் பாலியல் தொந்தரவு தாங்காமல் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.