காதலன் பார்க்க வராததால் மனம் உடைந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை
கன்னியாகுமரி: குழித்துறை அருகே உள்ள அரசு விடுதியில், காதலன் பார்க்க வராததால் மனம் உடைந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டத்தில் உள்ள பூதப்பாண்டியை அடுத்த கீரிப்பாறை லோயர் கேம்ப் பகுதியைச் சேர்ந்தவர் நிர்மலா. இவருடைய கணவர் ஞான கிருஷ்ணன். இவர்களுக்கு ஒரு மகனும், 3 மகள்களும் உள்ளனர்.
கணவன், மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நிர்மலா தனது கணவர் ஞான கிருஷ்ணனை விட்டு பிரிந்து தற்போது மணிகண்டன் என்பவருடன் சேர்ந்து வாழ்கிறார். நிர்மலாவின் மகள் தீபா மார்த்தாண்டம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி வளாகத்தில் உள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவிகள் விடுதியில் இவர் தங்கியிருந்தார்.
இந்நிலையில், நேற்று விடுதியில் தோழிகளுடன் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த தீபா திடீரென மயங்கி விழுந்தார். அதையடுத்து, தீபா அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் இன்றி தீபா பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த மார்த்தாண்டம் போலீசார் இதுகுறித்து மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தீபா ஒரு இளைஞரை காதலித்து வந்ததாகவும், அவர் கடந்த சில நாட்களாக தன்னை பார்க்க வரவில்லை என்று தீபா மிகுந்த சோகத்தில் இருந்ததாகவும், அதனால் மனம் உடைந்த தீபா தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு மாணவிகள் விடுதியில் மாணவி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட இந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.