கருணாநிதியை பார்க்க மோடி வருவாரா? மாட்டாரா? பாஜக மௌனம் ஏன்?
மோடி நாளை கருணாநிதியை சந்திக்க சென்னை வருவார் என தகவல்கள் கூறுகின்றன.
Recommended Video
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிய பிரதமர் மோடி நாளை மருத்துவமனை வருவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை கிட்டத்தட்ட பெரும்பாலான கட்சி தலைவர்கள் வந்து சந்தித்து விட்டு சென்றுவிட்டனர். குடியரசுதலைவர், தமிழக ஆளுநர், மத்திய அமைச்சர்கள், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து விட்டு சென்றனர்.
விஜயகாந்த் வரமுடியவில்லை
இதில் சிலர் கருணாநிதி மீதுள்ள தனிப்பட்ட பாசம் காரணமாக மீண்டும் மீண்டும் மருத்துவமனைக்கு வந்து அவரது உடல்நலம் கேட்டு தெரிந்து கொண்டு சென்று கொண்டுள்ளனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளிநாட்டில் இருப்பதால், கருணாநிதி நலம் பெற வேண்டும் என வாழ்த்து அனுப்பியிருந்தார். தேமுதிக சார்பாக விஜயகாந்த்தின் மைத்துனர் சுதீஷ் நேற்றிரவு மருத்துவமனை வந்து விசாரித்து விட்டு சென்றார்.
ட்விட்டர்களில் வாழ்த்து
இதைதவிர நேரில் வர இயலாத பிற மாநில முதலமைச்சர்கள், தலைவர்களும் கருணாநிதி நலம் பெற வேண்டும் என வாழ்த்து அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். இந்த வாழ்த்துக்களை தங்களது ட்விட்டர் பக்கங்களிலும் பதிவிட்டு வருகின்றனர்.
நாடு திரும்பிய மோடி
ஆனால் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதித்த நாளிலிருந்தே பிரதமர் மோடி மீதுதான் அனைவரது கவனமும் திரும்பியது. மருத்துவமனையில் அனுமதித்த அன்றைய தினம் மோடி வெளிநாட்டில் இருந்தார். எனவே நாடு திரும்பி, தமிழகம் வருவார் என மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை அதுகுறித்த எந்த தகவலும் இல்லை.
எந்த உதவியும் செய்ய தயார்
ஆனால் கருணாநிதி உடல்நிலை குறித்து ஸ்டாலினிடமும், கனிமொழியிடமும் தொலைபேசி மூலம் கேட்டறிந்தார். அத்துடன் தி.மு.க தலைவர் கருணாநிதியின் சிகிச்சைக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் செய்யத் தயாராக இருப்பதாக ஸ்டாலின், கனிமொழியிடம் தெரிவித்ததாக தனது ட்விட்டர் பக்கத்திலும் மோடி பதிவிட்டிருந்தார். இந்நிலையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க பிரதமர் மோடி நாளை சென்னை வரவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
மோடி இன்று வருவாரா?
ஒருவேளை நாளை பிரதமர் வருவது உறுதியானால், அவருக்கான பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும், எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் நடவடிக்கை எடுக்க போலீசார் தரப்பில் ஏற்கனவே ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அது பிரதமர் மட்டும் என்றில்லாமல், மருத்துவமனைக்கு எந்த விஐபி வந்தாலும், அவர்களின் பாதுகாப்பு குறித்து போலீசார் தரப்பில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. நாட்டின் முதல் குடிமகனான குடியரசு தலைவரே கருணாநிதியை வந்து சந்தித்து சென்றுவிட்ட நிலையில், பிரதமர் ஏன் இன்னும் சென்னை வராமல் இருக்கிறார் என்பது பல கேள்விகளையும், ஐயங்களையும் எழுப்பி வருகிறது.