“எல்லாமே ஆங்கிலமா? கையெழுத்தையாவது தமிழில் போடுங்க”.. ராமேஸ்வரத்தில் பேசிய பிரதமர் மோடி!
சென்னை: ராமேஸ்வரத்தில் புதிய ரயில்வே பாலத்தை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "கையெழுத்தையாவது தமிழ் மொழியில் போடக்கூடாதா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தனக்கு தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்கள் அனுப்பும் கடிதங்களில் அவர்களின் கையெழுத்தும் ஆங்கிலத்தில் இருப்பதாகச் சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, கையெழுத்தையாவது தமிழில் போடுங்கள் எனப் கூறியுள்ளார்.

ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி
ராமேஸ்வரத்தில் ரூ.8,300 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் ரூ.535 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பாம்பன் பாலத்தை, ராம நவமி தினமான இன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து, ராமேஸ்வரம் - தாம்பரம் இடையேயான ரயில் சேவையையும் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பின்னர், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயிலுக்கு சாலை மார்க்கமாக சென்ற அவர், அங்கு சாமி தரிசனம் செய்தார். ராமநாத ஸ்வாமி கோல் சார்பாக பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடி
ராமநாத சுவாமி கோவிலில் அனுமன் வழிபட்ட லிங்கம், சீதை வழிபட்ட லிங்கம் ஆகியவற்றை தரிசித்தார் பிரதமர் மோடி. ராமநாதசாமி கருவறை வாசலில் பிரதமர் அமர்ந்து பூஜை செய்யவும் சிறிது நேரம் தியானம் செய்யவும் சிறிய மரப்பலகைகளாலான மேடை அமைக்கப்பட்டிருந்தது. அதில் அமர்ந்து தியானம் செய்தார். சுமார் 45 நிமிடங்கள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார் பிரதமர் நரேந்திர மோடி.
இதையடுத்து, ராமேஸ்வரத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை துவக்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி ரூ.8,300 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு புதிய வளர்ச்சி திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். அதைத் தொடர்ந்து தமிழில் வணக்கம் கூறி பிரதமர் நரேந்திர மோடி உரையை தொடங்கினார்.
பிரதமர் மோடி பேச்சு
"ராமநவமி நாளான இன்று அயோத்தியில் சூரிய திலகம் தெரிந்தது; இன்று ராம நவமி என்பதால் என்னுடன் சேர்ந்து ஜெய் ஸ்ரீ ராம் என்று முழங்குங்கள்; தமிழ்நாட்டின் சங்க இலக்கியங்களில் கூட ராமர் பற்றி கூறப்பட்டுள்ளது. அனைவருக்கும் ராமநவமி நல்வாழ்த்துக்கள்" எனக்கூறி ஜெய் ஸ்ரீ ராம் என மூன்று முறை முழங்கினார் பிரதமர் நரேந்திர மோடி. இன்று ராம நவமி என்பதால் அனைவரும் என்னுடன் சேர்ந்து கூறுங்கள் என "ஜெய்ஸ்ரீ ராம்" என பிரதமர் மோடி முழக்கமிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், "நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மாநில மொழியில் மருத்துவ பாடங்கள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் தமிழ் மொழியில் மருத்துவ படிப்புகளை தொடங்க தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். தமிழ் மொழியின் பாரம்பரியம் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றடைந்துள்ளது.
வழக்கமாக எனக்கு தமிழ்நாட்டில் இருந்து சில தலைவர்கள் கடிதங்கள் எழுதுவது உண்டு. அந்த கடிதங்களில் எனக்கு மிக ஆச்சர்யத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயம் என்னவென்றால் கடிதம் என்னவோ ஆங்கிலத்தில் இருக்கிறது. ஆனால், கையெழுத்தும் ஆங்கிலத்திலேயே இருக்கிறது. குறைந்தபட்சம் கையெழுத்தையாவது தமிழில் போடக்கூடாதா என நான் நினைப்பது உண்டு.
21 ஆம் நூற்றாண்டில் நாம் இந்த மகத்தான பாரம்பரியத்தை நாம் முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்பதே எனது உறுதியான கருத்து. இந்த மண் தொடர்ந்து புதிய சக்தியை, உள் எழுச்சியை அளித்துவரும் என்பதில் எனக்கு எள் அளவும் சந்தேகமில்லை." எனப் பேசியுள்ளார் பிரதமர் மோடி.












Click it and Unblock the Notifications