காவிரி பிரச்சனை: இரு மாநிலங்களின் உரிமைகள் பாதிக்காத வகையில் பிரதமர் மோடி தீர்வு காண்பார்: தமிழிசை
கும்பகோணம்: காவிரி நீர் தொடர்பான பிரச்சனையில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் பிரதமர் நரேந்திர மோடி தீர்வு காண்பார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்திற்கு சென்றிருந்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நெசவாளர்கள் தினத்தை முன்னிட்டு அங்குள்ள திருவள்ளூவர் பட்டு கைத்தறி நெசவாளர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நெசவாளர்கள் வாழ்வாதாரம் உயர்வடைய குறைந்தது 5 சதவீதம் கைத்தறி ஜவுளிகளை அரசுத் துறைகள் பயன்படுத்த முன் வர வேண்டும்.
பா.ஜ.கவுடன் தே.மு.தி.க. மற்றும் பா.ம.க. ஆகிய கட்சிகள் கூட்டணி வைக்கவில்லை என்பதால் தான் தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆதிக்கம் அதிகமாகி விட்டது. உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க.வை மக்கள் ஆதரிக்க வேண்டும். காவிரி நீர் பிரச்சினையில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் பிரதமர் மோடி தீர்வு காண்பார் என்று கூறினார்.