பாமக யாருடன் கூட்டணி? இந்தியாவின் பெயரை மாற்றணுமா? ராமதாஸ் சொன்ன பளிச் பதில்கள்!
கும்பகோணம்: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது குறித்து செயற்குழு -பொதுக்குழுவில் முடிவெடுக்கப்படும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அதேபோல் இந்தியா பெயரே போதுமானது என்றும் பாரத் என்ற பெயர் தேவையில்லை என்று தான் தாம் கருதுவதாகவும் கூறியுள்ளார். கும்பகோணத்தில் 85 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார்.

இந்தியா என்கிற பெயரை பாரத் என்று மாற்றப்படுவதாக சொல்கிறார்களே, அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என அன்புமணி ராமதாஸிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, இந்தியா என்றும் சொல்லலாம், பாரத் என்றும் சொல்லலாம் என இரண்டையும் சேர்த்துக் கூறினார்.
மேலும், ஒரு கட்டத்தில் முதலில் பெயர் குறித்த முடிவை மத்திய அரசு எடுக்கட்டும் அதன் பிறகு கருத்து தெரிவிக்கிறேன் எனக் கூறி நழுவிக்கொண்டார். ஆனால் ராமதாஸ் அப்படியில்லை, இந்தியா பெயரே போதுமானது என பளிச் பதில் கொடுத்துள்ளார். இதன் மூலம் பாரத் என்ற பெயரை அவர் விரும்பவில்லை என்பது தெரியவருகிறது.
குறுவை பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகுவது பற்றி கவலை தெரிவித்த ராமதாஸ், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்தார். சமூக நீதிதான் எல்லாவற்றிற்கும் சரியான பரிகாரம் எனவும் அவர் தெரிவித்தார்.
தமிழக அரசுக்கு தாங்கள் போடும் மதிப்பெண் எவ்வளவு என்ற கேள்விக்கு, இன்னும் தாம் மதிப்பெண் போடவில்லை எனத் தெரிவித்தார். இதன் மூலம் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி விவகாரத்தில் எது வேண்டுமானாலும் நிகழலாம் என்பதை ராமதாஸ் உணர்த்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications