தொடங்கியது பாஜக- பாமக கூட்டணிப் பேச்சுவார்த்தை - 2 நாளில் இறுதி முடிவு: ஜி.கே. மணி தகவல்
சென்னை: பாரதிய ஜனதா கட்சியுடன் நடத்தப்பட்டு வரும் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் 2 நாட்களில் இறுதி முடிவு எட்டப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தலில் தேசிய மற்றும் திராவிட கட்சிகளுடன் கூட்டனியே இல்லை என்று அறிவித்தது பா.ம.க. அத்துடன் ஜாதிய கட்சிகளுடன் இணைந்து சமூக ஜனநாயகக் கூட்டணியை உருவாக்கியிருந்தது பா.ம.க. பின்னர் 10 தொகுதிகளுக்கு வேட்பாளர்களையும் அறிவித்து பிரசாரத்தையும் மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் இணைவது குறித்து ரகசிய பேச்சுவார்த்தைகளை பாமக மேற்கொண்டது. இதில் பெரும் இழுபறியே நீடித்து வந்தது. பாமக அறிவித்த 10 தொகுதிகளை விட்டுக் கொடுக்க முடியாது என பிடிவாதம் காட்டியது.

பின்னர் ஒருவழியாக ஒருசில தொகுதிகளை விட்டுக் கொடுக்க முன்வந்தது. இதனைத் தொடர்ந்து பாஜகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழுவையும் நேற்று அமைத்தது பா.ம.க.
இதைத் தொடர்ந்து பாஜகவுடன் பாட்டாளி மக்கள் கட்சி இன்று முதல் கட்ட அதிகாரப்பூர்வமான கூட்டணிப் பேச்சுவார்த்தையை நடத்தியது. பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையில் பாமகவின் ஜி.கே. மணி, ஏ.கே. மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். பாஜகவின் இல. கணேசன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் அடங்கிய பாஜக குழுவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே. மணி, தற்போது முதல் கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளோம். ஞாயிறு அல்லது திங்கள்கிழமை இறுதி முடிவு எட்டப்படும் என்றார்.
அதேபோல் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் இல. கணேசன், பாமகவுடன் தற்போது பூர்வாங்க பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications