ஜனாதிபதி தேர்தல்: பாமக புறக்கணிப்பு- ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!
ஜனாதிபதி தேர்தலை பாமக புறக்கணிப்பதாக அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
சென்னை: ஜனாதிபதி தேர்தலை பாமக புறக்கணிக்கும் என அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அதிரடியாக அறிவித்துள்ளார்.
நாட்டின் 14-வது ஜனாதிபதியை தேர்வு செய்ய நாளை தேர்தல் நடைபெறுகிறது. அனைத்து மாநில சட்டசபைகள் மற்றும் நாடாளுமன்றத்தில் இத்தேர்தல் நடைபெற உள்ளது.
பாஜக கூட்டணியின் சார்பில் ராம்நாத் கோவிந்தும் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் லோக்சபா முன்னாள் சபாநாயகர் மீராகுமாரையும் வேட்பாளர்களாக நிறுத்தி உள்ளன. ராம்நாத் கோவிந்துக்கு அதிமுகவின் அத்தனை கோஷ்டிகளும் முழு ஆதரவை தெரிவித்துள்ளன.
திமுக மீராகுமாரை ஆதரிக்கிறது. பாமக இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்து வந்தது. இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ஜனாதிபதி தேர்தலை தமது கட்சி புறக்கணிக்கும் என அறிவித்தார்.
மேலும், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்தே ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதாகவும் ராமதாஸ் கூறினார். இதனால் பாமகவின் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நாளை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கமாட்டார்.