காவிரி வாரியத்திற்காக பாமக சார்பில் முழுஅடைப்பு... எல்லையில் பேருந்துகள் நிறுத்தம்!
தமிழகத்தில் பாமக சார்பில் நடைபெறும் முழுஅடைப்பால் கர்நாடகாவில் இருந்து வரும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.
Recommended Video
தர்மபுரி : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பாமக சார்பில் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. தர்மபுரி எல்லைப் பகுதியில் 4 அரசுப் பேருந்துகள் தாக்கப்பட்டதால் முன்எச்சரிக்கையாக தமிழகம் வரும் கர்நாடக பேருந்துகள் தடுத்து நிறுத்தப்படுகின்றன.
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடக்கிறது. பாமக விடுத்துள்ள முழு அடைப்பிற்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.
முழுஅடைப்பு போராட்டத்தையொட்டி மதுராந்தகத்தில் 100 சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வந்தவாசியிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் அமர்ந்து பாமகவினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கலில் கரூர் - சேலம் பயணிகள் ரயிலை மறித்து பாமகவினர் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.
தர்மபுரியில் முழு அடைப்பு நடைபெற்று வரும் நிலையில் 4 அரசுப் பேருந்தின் மீது மர்ம நபர்கள் கல்வீதித் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் எல்லைப் பகுதிகளில் போக்குவரத்து குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பாமக சார்பில் நடைபெறும் முழு அடைப்பினையொட்டி கர்நாடகா மாநிலத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. கர்நாடகா எல்லை வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகள் கர்நாடக எல்லையில் இருந்து தமிழக எல்லைக்கு மாறி வந்து பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.