சொந்த தொகுதியில் போட்டியிட தைரியமில்லாத விஜயகாந்த்... பாமக வேட்பாளர் வக்கீல் பாலு தாக்கு
சென்னை: சட்டசபை தேர்தலில் ஒவ்வொரு முறையும் தொகுதி மாறும் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அவரது சொந்த தொகுதியில் போட்டியிட தைரியமில்லை என்று உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் பாலு கூறியுள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு இன்று தனது வேட்புமனுவை வட்டாட்சியர் அலுவலகத்தில் தாக்கல் செய்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய பாலு, அதிமுகவும், திமுகவும் இந்த தொகுதிக்கு எந்த நன்மையும் செய்யவில்லை என்று கூறினார். இந்த தொகுதியில் குளங்களும், ஏரிகளும் பராமரிக்கப்படாமல் உள்ளது. ஏரி, குளங்களை தூர்வாரி பராமரித்து விவசாயத்தை மீண்டும் மலரச்செய்வேன் என்று கூறினார்.
ஆர்.ஓ. பிளாண்ட் அமைத்து தூய்மையான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வேன் என்று கூறிய பாலு, இந்த தொகுதியில் விஜயகாந்த் போட்டியிடுவது ஏன்று கேள்வி எழுப்பினார்.
விஜயகாந்த் ஒவ்வொரு முறையும் தொகுதி மாறுகிறார். முதலில் விருதாச்சலத்தில் போட்டியிட்டார், கடந்த முறை ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். கடந்த 10 ஆண்டுகளாக எந்த நன்மையும் அவர் வெற்றி பெற்ற தொகுதிகளுக்கு செய்யவில்லை.
கடந்த 10 ஆண்டுகளாக சட்டசபை உறுப்பினராக இருக்கும் விஜயகாந்த், ஒருமுறை கூட தொகுதி மக்களுக்காக கேள்வி கேட்கவில்லை.
விஜயகாந்துக்கும் உடுமலைப் பேட்டை தொகுதிக்கும் எந்த தொடர்பும் இல்லை. விஜயகாந்த் பிறந்த தொகுதி மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ளது. அவரது வீடு சென்னை விருகம்பாக்கத்தில் உள்ளது. விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவின் பிறந்த ஊர் குடியாத்தம் தொகுதியில் உள்ளது.
இந்த தொகுதிகளில் எல்லாம் போட்டியிடாமல் அவர் ஏன் உளுந்தூர் பேட்டை தொகுதியை தேர்வு செய்தார். இம்முறை அவருக்கு யாரும் ஓட்டு போடமாட்டார்கள். விஜயகாந்த் தோல்வியடைவது உறுதி என்று கூறினார்.
இதேபோல உளுந்தூர் பேட்டை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜி.ஆர்.வசந்தவேல் இன்று மனுதாக்கல் செய்தார்.