தென் மாவட்டங்களில் பாமகவை வளர்ப்பது எப்படி.. தைலாபுரம் தோட்டத்தில் ஆலோசனை!
இதுதொடர்பாக பாமக வெளியிட்டுள்ள அறிக்கையில், பா.ம.க. தென் மாவட்ட பொறுப்பாளர்களுடனான ஆலோசனைக்கூட்டம் தைலாபுரத்தில் உள்ள பா.ம.க. அரசியல் பயிலரங்கில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் புதுக்கோட்டை, திருச்சி, கரூர், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள மாநில துணைப்பொதுச்செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் துணை அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறினார். தென்மாவட்டங்களில் உள்ள அனைத்துக் கிராமங்களிலும் கிளைகளைத் தொடங்கி பா.ம.க.வை வலுப்படுத்துவதென கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
பா.ம.க. வெள்ளி விழாவையும், பசுமைத்தாயகம் தினத்தையும் வரும் 25-ம் தேதி கிராமங்கள், நகரங்கள், தெருக்கள் தோறும் கொடியேற்றியும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல், தமிழக மக்களை பாதிக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்று அதில் கூறப்பட்டுள்ளது.