தமிழக அரசியலில் பாமகதான் 3வது அணி - சொல்கிறார் அன்புமணி ராமதாஸ்
நெல்லை: தமிழக அரசியல் களத்தில் நாங்கள்தான் மூன்றாவது அணி என்று பாமக முதல்வர் வேட்பாளாரான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி பங்கேற்றார். இதில் நெல்லை, குமரி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு பிறகு பேசிய அவர், ‘'மக்கள் நலக்கூட்டணி என்பது சந்தர்ப்பவாத கூட்டணி. அந்த அணிக்கு கொள்கை, கோட்பாடு போன்றவை கிடையாது. தமிழகத்தில் அதிமுக, திமுகவுக்கு அடுத்ததாக பாட்டாளி மக்கள் கட்சிதான் மூன்றாவது அணி. எதிர்க்கட்சித் தலைவராகவே தேமுதிக தலைவர் விஜயகாந்தால் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை.
அப்படியிருக்கையில் அவரை முதல்வர் வேட்பாளர் என்பது சரியானதல்ல. விஜயகாந்த் முதல்வராக மக்கள் வாக்களிக்கமாட்டார்கள். விஜயகாந்தால் சிறந்த எதிர்கட்சி தலைவராக செயல்பட முடியவில்லை. அதனால்தான் சொல்கிறேன் நாங்கள் தான் 3வது அணி. மக்கள் நல கூட்டணியால் ஒரு தொகுதி கூட வெற்றிபெற முடியாது.
பா.ம.க. தன்னம்பிக்கை மிகுந்த கட்சியாக உருவெடுத்துள்ளது. எங்களது செயல்திட்டங்களை மக்களிடம் தெரிவித்து வருகிறோம். மண்டல மாநாடு, மாநில மாநாடு போன்றவற்றோடு நின்றுவிடாமல் மக்களோடு கலந்துரையாடலிலும் ஈடுபட்டு வருகிறோம். இதற்கு வரவேற்பு அதிகரித்துள்ளது'' என்று கூறினார்.












Click it and Unblock the Notifications