இன்று வரச்சொல்லிவிட்டு எஸ்கேப் ஆன அதிகாரிகள்! 1 மணி நேரம் வாசலில் அமர்ந்த பாமக எம்.எல்.ஏ. அருள்!
சேலம்: தன்னை வரச்சொல்லி அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்துவிட்டு கடைசி நேரத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் வெளியே சென்றுவிட்டதால், பாமக எம்.எல்.ஏ. அருள் 1 மணி நேரத்துக்கும் மேல் யூனியன் ஆஃபிஸ் வாசலில் அமர்ந்து தர்ணா நடத்தினார்.
ஒரு எம்.எல்.ஏ.வை காலை 10.30 மணிக்கு சந்திக்க வரச் சொல்லிவிட்டு அதிகாரிகள் நமக்கென்னவென்று சென்றதால், அருள் எம்.எல்.ஏ. நடத்திய தர்ணாவுக்கு ஆதரவாக பாமகவினர் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடைசியில் விழுந்தடித்து ஓடி வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் ஒரு வாரத்தில் எல்லாவற்றையும் சரி செய்வதாக கூறி அருளை அனுப்பி வைத்தனர்.

இது குறித்து சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.எல்.ஏ. அருள் கூறியதாவது;
''சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி, சேலம் ஒன்றியத்தில் நடைபெற்று வருகின்ற அனைத்து வளர்ச்சி பணிகளும் தரமற்ற முறையில் நடைபெற்று வருவதாக மக்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் எனக்கு வந்த வண்ணம் இருந்தன. அதேபோல் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் அரசு நிகழ்ச்சிகளில் எதற்கும் அழைப்பு விடுப்பதில்லை.''
''மக்கள் வரிப்பணத்தில் நடைபெறும் ஆட்சியில் மக்கள் பிரதிநிதிகளுக்கு முறையாக தகவல் தெரிவிக்க வேண்டும். ஒன்றியக் குழுத் தலைவரது கணவர் ஏதேச்ச அதிகாரத்துடன் ஒன்றிய நிர்வாகத்தை நடத்துவது குறித்தும் புகார்கள் வருகின்றன. இந்நிலையில் பல கோரிக்கைகளை முன்வைத்து நேற்று இரண்டு BDO விடம் நான் 22-7-23 காலை 10.30 க்கு ஒன்றிய வட்டார அலுவலகத்திற்கு வருவதாக கூறியிருந்தேன்.''

'' சரி என வரச் சொல்லிவிட்டு இன்று நான் வருவதற்கு முன்பே அலுவலகத்தில் BDOக்கள் மற்றும் அதிகாரிகள் முகாம் என்று கூறி வெளியே சென்று விட்டனர். அதனால் அவர்கள் வரும் வரை அலுவலகத்தின் முன்பு அமர்ந்து காத்திருந்தேன். BDOக்கள் AE வந்த பின்பு சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பணிகள் பட்டியல்கள் விரைவில் தர வேண்டும், அனைத்து பணிகளையும் தர கட்டுப்பாட்டு மூலம் ஆய்வு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டேன். ஒரு வாரத்தில் சரி செய்வது குறித்த திட்டங்களுடன் சந்திப்பதாக கூறியதால் கிளம்பினோம்.''












Click it and Unblock the Notifications