கருணாநிதி எனும் பல்கலைக்கழகம் நூற்றை கடந்து நலமுடன் இருக்க ஆசை: ராமதாஸ் பேட்டி
கருணாநிதி எனும் பல்கலைக்கழகம் நூற்றை கடந்து நலமுடன் இருக்க ஆசைப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி என்னும் பல்கலைக்கழகம் நூற்றைக் கடந்து நலமோடு இருக்க வேண்டும் என்பது எனது ஆசை. அந்த ஆசை நிறைவேறும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை நேற்று முன் தினம் இரவு மோசமானதைத் தொடர்ந்து அவர் கோபாலபுரம் இல்லத்திலிருந்து காவேரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுசெல்லப்பட்டார். அங்கே அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டு 24 மணி நேரமும் அவருடைய உடல் நிலை மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து காவேரி மருத்துவமனை நிர்வாகம் கருணாநிதியின் உடல் நிலை சீராக உள்ளது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலை சரியில்லாமல் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், மாநில மற்றும் தேசிய அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் காவேரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடல் நலம் குறித்து அவரது குடும்பத்தினரிடம் விசாரித்து வருகின்றனர். துணை குடியரசு தலைவர் வெங்கய்ய நாயுடு, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் நலம் விசாரித்தனர்.
இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு வந்து திமுக தலைவர் கருணாநிதியின் நலம் விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், "கருணாநிதி என்னும் பல்கலைக்கழகம் நூற்றைக் கடந்து நலமோடு இருக்க வேண்டும் என்பது எனது ஆசை. இது எனது ஆசை மட்டுமல்ல உலகெங்கும் வாழக்கூடிய தமிழ் மக்களுடைய ஆசையும் அதுதான். நிச்சயமாக அந்த ஆசை நிறைவேறும்" என்று கூறினார்.
சில மாதங்களுக்கு முன்பு ராமதாஸ் கோபாலபுரத்துக்குச் சென்று திமுக தலைவர் கருணாநிதியை நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.