ஒரு பைசா ஊழல் இல்லாத தமிழகம் படைப்போம்... பாமகவின் அடுத்த பிரசார வாசகம்!
சென்னை: பாமக தனது 3வது பிரசார வாசகத்தை மக்கள் முன் வைத்துள்ளது. 50 ஆண்டு ஊழலுக்கு முடிவு கட்டுவோம். ஒரு பைசா ஊழல் இல்லா தமிழகம் படைப்போம் என்பதே அந்த மூன்றாவது வாசகம்.
டாக்டர் அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக அறிவித்த கையோடு சட்டசபைத் தேர்தலுக்குத் தயாராகி விட்டது பாமக. ஊர் தோறும் மாநாடுகள், கூட்டங்கள் என டாக்டர் அன்புமணியும், டாக்டர் ராமதாஸும் தீவிரப் பணியாற்றி வருகின்றனர்.
மேலும் மக்களிடம் ரீச் ஆகும் வகையில் புதுப் புது பிரசார வாசகங்களையும் அவர்கள் வெளியிட்டு வருகின்றனர்.
புதுப் பொலிவுடன் பேஸ்புக், டிவிட்டர் பக்கங்கள்
அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தவுடன் அவரது பேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கங்கள் புதுப் பொலிவு பெற்றன. தினசரி அப்டேட்டுகள் களை கட்டியுள்ளன.
புதிய இணையதளம்
அதேபோல தனது புதிய இணயதளத்தையும் அன்புமணி தொடங்கினார். அன்புமணி பார் சிம் என்பது அந்தத் தளத்தின் பெயர்.
மாற்றம் முன்னேற்றம் அன்புமணி
இதையடுத்து முதல் பிரசார வாசகமாக மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்ற ஸ்லோகனும், லோகோவும் வெளியானது. இதை பலரும் கிண்டலடித்து விமர்சித்தாலும் கூட பிரபலமாகி விட்டது என்பதே உண்மை.
புதியதோர் தமிழகம் செய்வோம்
இதேபோல புதியதோர் தமிழகம் செய்வோம் என்ற ஸ்லோகனையும் பாமக களத்தில் இறக்கி விட்டது. இதுவும் கூட பாமகவினர் மத்தியில் பிரபலமானது.
முதல் நாள் முதல் கையெழுத்து
மது விலக்கு தொடர்பான வாசகம் இது. முதல் நாள் முதல் கையெழுத்து என்ற வாசகத்துடன் வெளியாகி இதுவும் ஹிட்டானது.. சமூக வலைதளக் குசும்பர்களின் கிண்டலுக்கும் ஆளானது. ஆனாலும் பிரபலமானது.
50 ஆண்டு ஊழலுக்கு முடிவு கட்டுவோம்
இப்போது வெளியாகியுள்ள 3வது ஸ்லோகன் இது. 50 ஆண்டு ஊழலுக்கு முடிவு கட்டுவோம். ஒரு பைசா ஊழல் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்று இந்த வாசகம் கூறுகிறது.