இலங்கை போர் குற்ற விசாரணை அறிக்கை ஐ.நா.வில் தாக்கல் ஆவதை இந்தியா உறுதி செய்ய வேண்டும் ராமதாஸ்
சென்னை: இலங்கை மீதான போர் குற்ற விசாரணை அறிக்கை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் ஆவதை இந்தியா உறுதி செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
ஜெனிவாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 28-வது கூட்டத்தில் மார்ச் 25-ந் தேதி இலங்கை போர்க்குற்ற விசாரணை குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

போர்க்குற்ற விசாரணை தொடர்பான அறிக்கையை ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தில் தாக்கல் செய்ய விடாமல் முட்டுக்கட்டைப் போடும் செயல்களில் இலங்கையின் புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேன ஈடுபட்டிருக்கிறார்.
இலங்கையில் ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை என்பது தான் உண்மை. தமிழர் எதிர்ப்பு நிலைப்பாட்டை ராஜபக்சேவை விட சிறிசேன தீவிரமாக கடைபிடித்து வருகிறார். இலங்கைப் பிரச்சினையை அமெரிக்காவும், அதன் ஆதரவு நாடுகளும் கிட்டத்தட்ட கைகழுவி விட்ட நிலையில், ஈழத் தமிழர்களுக்கு நீதி பெற்றுத் தரும் பொறுப்பு முழுக்க முழுக்க இந்தியாவுக்கே உள்ளது.
எனவே, இலங்கைப் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் விசாரணை அறிக்கை ஏற்கனவே அறிவித்தபடி அடுத்த மாதம் 25-ந் தேதி மனித உரிமைப் பேரவையில் தாக்கல் செய்யப்படுவதை இந்தியா தான் உறுதி செய்யவேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications