16 நாட்களாக அகற்றப்படாமல் இருக்கும் அம்மா.. முற்றுகையில் குதித்த பாமக.. கரூரில் பரபரப்பு!
கரூர்: கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி 16 நாட்களாக ஒட்டப்பட்டிருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பேனர்களை அகற்றக் கோரி பா.ம.க வினர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் நகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், ரவுண்டானா, அரிஸ்டோ கார்னர், லைட் ஹவுஸ் கார்னர், சர்ச் கார்னர், பை-பாஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொது செயலாளருமான ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவை கொண்டாடும் வகையில் அனைத்து இடங்களிலும் விளம்பர பேனர்களை வைத்து போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தும் வகையில் அ.தி.மு.க வினர் கடந்த 16 நாட்களாக அம்மா பேனர்களை வைத்துள்ளனர்.

ஆனால் சேலத்தில் நடைபெற்ற பாமக மாநாட்டிற்காக வைக்கப்பட்ட பேனரை 6 மணி நேரத்தில் கரூர் நகராட்சி அலுவலர்கள் எடுத்தனர். முறையான அனுமதி பெற்று வைக்கப்பட்ட இந்த பேனர்களை காவல் துறையினரும், கரூர் நகராட்சி அதிகாரிகளும் எடுத்ததால் பாமகவினர் ஆவேசமடைந்தனர்.

இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை பொது செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரன் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை முடித்தவுடன் நேராக கரூர் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று முற்றுகையிட்டார். இவருடன் சுமார் 50 க்கும் மேற்பட்ட பா.ம.க வினரும் சென்று முற்றுகையிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தப் போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பி.எம்.கே.பாஸ்கரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆளுகின்ற அதிமுகவன் கைப்பாவையாக அதிகாரிகள் மாறும் அவல நிலை உள்ளது. போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் "அம்மா" விளம்பர பேனர்களை வைத்துள்ளனர். இதே நிலை நீடித்தால் பல்வேறு போராட்டங்களை கரூர் நகராட்சியை கண்டித்து பா.ம.க நடத்தும். இதற்காக நீதிமன்றத்தையும் நாடவுள்ளோம். விரைவில் இப்பேனர்களை பா.ம.க-வே மக்களை திரட்டி அகற்றும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications