அன்புமணி ராமதாசுக்கு திடீர் நெஞ்சுவலி! பெங்களூர் மருத்துவமனையில் அனுமதி
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அன்புமணி ராமதாஸ்.
தர்மபுரி: பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் நெஞ்சுவலி காரணமாக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாமக இளைஞரணித் தலைவரும், எம்.பியுமான அன்புமணி ராமதாஸ் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நேற்று தர்மபுரிக்கு வந்தார். அங்கே கட்சி நிகழ்ச்சிகள், திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

இதனிடையே அவருக்கு மதியம் 1 மணி அளவில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. பின்னர் சில நிகழ்ச்சிகளை பாதியில் ரத்து செய்துவிட்டு தர்மபுரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்றார்.
அதன் பின்னர் மருத்துவர்களின் ஆலோசனைப்படி பெங்களூரில் உள்ள நாராயணா ஹிருதாலயா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் அன்புமணி ராமதாஸ். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சிகிச்சைக்குப் பின்னர் அன்புமணி நலமுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications