காவேரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு இடையூறு செய்யாதீர்கள்.. ஒலிபெருக்கியில் போலீஸ் கோரிக்கை
காவேரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்தாதீர்கள் என போலீஸ் ஒலிப்பெருக்கி மூலம் அறிவித்துள்ளது.
சென்னை: சென்னை காவேரி மருத்துவமனையில் திரண்டிருக்கும் திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்று காவல் துறையினர் ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தல்களை அறிவித்துவருகின்றனர்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த ஜூலை 27 ஆம் தேதி இரவு உடல் நிலை மோசமானதைத் தொடர்ந்து அவர் சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் கருணாநிதியின் உடல் நிலை 24 மணி நேரமும் மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து திமுக தொண்டர்கள், பொதுமக்கள் காவேரி மருத்துவமனையின் முன்பு ஆயிரக் கணக்கில் திரண்டனர். இதனால், மருத்துவமனை அருகே போக்குவரத்துக்கும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கும் இடையூறு ஏற்பட்டது.
நேற்று முன் தினம் கருணாநிதியின் உடல் நிலையில் சிறு பின்னடைவு ஏற்பட்டு மிண்டும் சீரடைந்தது. அப்போது, திமுக தொண்டர்கள் பெரிய அளவில் திரண்டு கோஷங்களை எழுப்பினர். இதனால், போலீஸார் கூட்டத்தைக் கட்டுப்படுத்த லேசான தடியடி நடத்தினர்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் இன்று புதன்கிழமை 5 வது நாளாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வந்து கருணாநிதியின் உடல் நலம் விசாரித்து செல்கின்றனர். அதோடு, திமுக தொண்டர்களும் பொதுமக்களும் தொடர்ந்து காவேரி மருத்துவமனை வளாகத்திலேயே இருந்து வருகின்றனர். இன்று கூட்டம் ஓரளவு குறைவாகவே உள்ளது.
இந்நிலையில், காவல் துறையும் காவேரி மருத்துவமனை நிர்வாகமும், மருத்துவமனை வளாகத்தில் திரண்டிருக்கும் பொதுமக்களுக்கு ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தல்களை அறிவித்துவருகிறது. பொதுமக்களை ஒழுங்குபடுத்துவதற்காக நேற்று ஒலிப்பெருக்கி வைக்கப்பட்டது.
இதைத்தொடர்து, காவல் துறை இன்றும் மருத்துவமனையில் ஒலிப்பெருக்கி மூலம் அறிவிப்புகளை அறிவித்தது.
காவேரி மருத்துவமனையில் அன்றாடம் நோயாளிகள் வந்து செல்லும் இடத்தில்தான் நீங்கள் கூடியிருக்கிறீர்கள். தங்கள் இன்னுயிரைக் காப்பாற்றிக்கொள்ள மருத்துவமனைக்கு வருகிற நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம்.
மருத்துவம் பார்ப்பதற்கு மருத்துவர்கள் வந்துசெல்ல இந்த ஒரு பாதை மட்டும்தான் இருக்கிறது. மருத்துவர்கள் வருகையைத் தாமதப்படுத்தினால் ஒவ்வொரு நிமிடமும் ஒரு இன்னுயிர் பறிபோகலாம். எனவே போக்குவரத்துக்கும் பொதுமக்களுகும் இடையூறு ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும். அவரவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், வரையறுக்கப்பட்ட இடத்தில் கண்ணியத்துடனும் கட்டுப்பட்டுடனும் இருக்க வேண்டும்.
குறிப்பாக ஊடகத்துறை நண்பர்கள் செய்தி சேகரிக்கும் ஆர்வத்தில் அபாயகரமான உச்சத்தில் ஏறுவது, முக்கிய பிரமுகர்களை சுற்றி நெருக்குவது போன்ற செயல்களில் ஈடுபடவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மருத்துவமனைக்கு, அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் வந்துசெல்கின்றனர். அதனால், மருத்துவமனையில் வாகனம் நிறுத்துவதற்கு போதுமான இடம் இல்லாததாலும், அனைவரும் வாகனங்களில் வந்தால் உள்ளே அனுமதிக்க முடியாது என்பதாலும் வாகனங்களில் வருபவர்கள் வாகனங்களை வெளியே நிறுத்திவிட்டு வர வேண்டும் என்று காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications