திண்டுக்கல் 'கஞ்சா செல்வி'யை சென்னை போலீசில் வசமாக சிக்க வைத்த ஆட்டோ டிரைவர்.. சுவாரசிய தகவல்
கஞ்சா கடத்தலில் திண்டுக்கல் செல்வியை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
சென்னை: கஞ்சா கடத்த முயன்ற திண்டுக்கல் செல்வியை போலீஸில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரின் சாமர்த்தியமான செயலுக்கும் முயற்சிக்கும் காவல்துறை உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இடம்: சென்னை சென்ட்ரல் நிலையம்,
நேரம்: அதிகாலை 2.30.
சவாரிக்காக ஒரு ஆட்டோ ஓட்டுனர் காத்திருக்கிறார்.
அப்போது ஒரு பெண் உட்பட 3 பேர் மூட்டை முடிச்சுகளுடன் அங்கு வந்து நின்றனர். எழும்பூர் ரயில் நிலையம் போக வேண்டும் என்று சொல்லி ஏறி உட்கார்கிறார்கள்,. வண்டியை கிளப்பிய சில நொடிகளிலேயே கஞ்சா வாசம் வருவதை ஆட்டோ ஓட்டுனர் உணர்கிறார். என்ன செய்வது என்று ஒரு கணம் யோசிக்கிறார். வண்டியை உடனே நிறுத்திவிட்டால் 3 பேரும் இறங்கி தப்பித்துவிடுவார்கள், கஞ்சா பற்றி கேட்டாலும் சந்தேகம் வந்துவிடும் என்பதால், அவர்களுடன் பேசியவாறே வண்டியை ஓட்டியுள்ளார். பேச்சுதான் அவர்களிடம் இருந்ததே தவிர அவரது கவனம் முழுவதும் எதிரில் யாராவது போலீஸ்காரர் தென்பட்டு விடமாட்டாரா என கண்களை சாலைகளில் சுழட்டியவாறே சென்றிருக்கிறார்.
ஆனால் போலீஸ்காரர்கள் ஒருவரும் தென்படவில்லை.பூங்கா ரெயில் நிலையம் அருகில் வரும்போது, பெரியமேடு போலீசாரின் ரோந்து வாகனத்தை பார்த்தும்தான் ஆட்டோ ஓட்டுனருக்கு நிம்மதியே வந்தது.
ஒரே அழுத்தாக ஆட்டோவை அழுத்தி ரோந்து வாகனம் அருகே கொண்டு போய் நிறுத்தினார். வேகமாக வந்த ஆட்டோவை பார்த்ததும் ரோந்து பணியிலிருந்த பெரியமேடு போலீஸார் என்னவென்று கேட்டனர். அதற்கு ஒட்டுனர் ஆட்டோவைவிட்டு இறங்கி சென்று "ஆட்டோவில் இருப்பவங்க மேல கஞ்சா வாடை வருது, சந்தேகமாக இருக்கு" என சொன்னார்.
போலீசாரிடம் ஓட்டுனர் செல்வதை பார்த்த உடனேயே 3 பேரும் அலறிதுடித்து ஆட்டோவிலிருந்து இறங்கி தப்பியோட பார்த்தனர். ஆனால் இருவர் கஞ்சா மூட்டைகளுடன் ஓடிவிட திண்டுக்கல் செல்வி மட்டும் மாட்டிக் கொண்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் 3 பேரும் விஜயவாடா சென்று அங்கு கஞ்சா வாங்கி மீண்டும் திண்டுக்கல் திரும்ப திட்டமிருந்தார்கள் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
நாட்டில் மகளிருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து கொண்டு போகிறதே என்று கவலைப்படுவதா? அல்லது மகளிரே குற்றங்களில் ஈடுபட்டு வருவதை நினைத்து கவலைப்படுவதா என்றே தெரியவில்லை. தமிழகத்தில் கஞ்சா போன்ற போதைபொருட்களின் கடத்தல் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. கஞ்சா நடமாட்டத்தை தமிழகத்தில் அடியோடு ஒழிக்க, மாவட்டங்களின் "லோக்கல் தலை"களை களையெடுத்தாலே போதும். எனினும் ஒருபக்கம் கிரிமினல்கள் எவ்வளவுதான் கடத்தலுக்கு ஸ்கெட் போட்டாலும் இன்னொருபக்கம் ஏதாவது ஒரு வகையில் மாட்டிக்கொண்டுதான் விழிக்கிறார்கள் திண்டுக்கல் செல்விபோல.