ஜல்லிக்கட்டு: அலங்காநல்லூரில் 21 மணி நேரம் விடிய விடிய போராட்டம்- இளைஞர்கள் வலுக்கட்டாயமாக கைது!
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி அலங்காநல்லூரில் 21 மணிநேரம் விடிய விடிய போராட்டம் நடத்திய இளைஞர்கள், மாணவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து வருகின்றனர்.
மதுரை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி கோரி மதுரை அருகே அலங்காநல்லூரில் விடிய விடிய 2-வது நாளாக போராட்டம் நடத்திய 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாணவர்கள், பெண்களை வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்தனர். இதனால் அலங்காநல்லூரில் உச்சகட்ட பதற்றம் நீடித்து வருகிறது.
அலங்காநல்லூரில் நேற்று காலையில் தன்னெழுச்சியாக திரண்ட இளைஞர்கள், பெண்கள் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி அமைதிவழி போராட்டத்தை முன்னெடுத்தனர். இப்போராட்டத்தில் அலங்காநல்லூர் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களும் இணைந்து கொண்டனர்.

இப்போராட்டத்தை நேற்று மாலை 5 மணிக்கே முடித்துக் கொள்ள வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர். இது தொடர்பாக வாடிப்பட்டி தாசில்தார் ஒலிபெருக்கி மூலமும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால் மாணவர்கள் போராட்டம் இரவிலும் தொடர்ந்தது. இதனால் பெரும் பதற்றம் நீடித்தது. இப்போராட்டம் நள்ளிரவைத் தாண்டியும் நீடித்தது. இப்போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், பெண்களுக்கு கிராம மக்கள் உணவு கொடுத்தனர்.
21 மணிநேரத்துக்கும் மேலாக போராட்டம் இன்று காலையிலும் தொடர்ந்தது. காலை 6 மணியைத் தாண்டியும் போராட்டம் நீடித்த நிலையில் திடீரென போலீசார் குவிக்கப்பட்டு ஜல்லிக்கட்டு மைதானம் சுற்றி வளைக்கப்பட்டது. அப்போது சட்டவிரோதமாக கூடியுள்ள நீங்கள் உடனே இங்கே இருந்து வெளியேற வேண்டும் என தாசில்தார் மீண்டும் ஒலிபெருக்கியில் எச்சரித்தார்.
அத்துடன் 10 நிமிடத்தில் மாணவர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட வேண்டும் என எஸ்பி விஜயேந்திர பிதாரி தலைமையிலான போலீஸ் படை எச்சரித்திருந்தது. ஆனாலும் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் இதை ஏற்க மறுத்தனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட இளைஞர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அகற்றி தரத்தரவென இழுத்து சென்று கைது செய்தனர். அப்போது போலீசாருடன் தள்ளு முள்ளு ஏற்பட்டது. மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் இளைஞர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனால் அங்கு உச்சகட்ட பதற்றம் நீடித்து வருகிறது.












Click it and Unblock the Notifications