ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற 33 இலங்கை அகதிகள் திருவள்ளூர் அருகே கைது
சென்னை: பழவேற்காட்டில் இருந்து கப்பல் மூலம் ஆஸ்திரேலிய நாட்டுக்குச் தப்பிச் செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 33 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை அகதிகளிடம் ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி அவர்களிடம் பெருமளவில் பணம் பறிக்கும் இடைத்தரர்கள் கும்பல்கள் தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றனர்.
இதுபோல் இவர்களிடம் பணம் பறித்துக் கொண்டு ஏதாவது ஒரு படகில் அளவுக்கு அதிகமான நபர்களை ஏற்றி அனுப்பி விடுகிவின்றனர். பல சமயங்களில் இந்த படகுகள் குறிப்பிட்ட நாடுகளுக்கு செல்ல முடியாமல் அதிக எடை காரணமாகவும், இடையிலே பழுதாகி விடுவதாலும் விபத்துகள் நடக்கும் அபாயங்கள் ஏற்படுகின்றன.
மேலும் இவைகளை மீறி வெளிநாடுகளுக்குச் செல்லும் அகதிகள் பலர் உரிய அனுமதி இல்லாமல் சென்று அங்குள்ள காவல்துறையினரிடம் சிக்கி கொள்கின்றனர். இந்நிலையில் கும்மிடிப்பூண்டி, புழல், வேலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அகதிகள் முகாம்களில் இருந்து 30 க்கும் மேற்பட்டோரை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைப்பதாக கூறி ஒரு கும்பல் திருக்கழுங்குன்றம், பழவேற்காடு பகுதிகளுக்கு அழைத்து வந்துள்ளனர். இது குறித்து கியூ பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து பொன்னேரி-பழவேற்காடு சாலையில் திருப்பாலாவனம் போலீஸார் புதன்கிழமை நள்ளிரவு வாகனச் சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியாக வந்த வேனை மடக்கி சோதனையிட்டனர். அப்போது வேனில் 18 பேர் இருந்தனர். விசாரணையில் அவர்கள் அனைவரும் கும்மிடிப்பூண்டி, வேலூர், பவானிசாகர் பகுதிகளில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர்கள் எனத் தெரிய வந்தது.
மேலும் அனைவரும் பழவேற்காடு சென்று அங்கிருந்து கப்பல் மூலம் ஆஸ்திரேலிய நாட்டுக்குச் செல்லவிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அகதிகளை ஏற்றிவந்த வேனை போலீஸார் பறிமுதல் செய்தனர். அதேபோல் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சோழவரம் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்ட போது, அப்போது அவ்வழியாக வந்த வேனை மடக்கி சோதனை செய்தனர்.
அதில் வேலூர், புழல் பகுதிகளில் உள்ள இலங்கை அகதிகள் 10 பேர் அதில் பயணம் செல்வது தெரிந்தது. இதையடுத்து வேனை பறிமுதல் செய்த போலீஸார், அதில் இருந்த அகதிகளை சோழவரம் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர். முன்னதாக திருக்கழுக்குன்றம் அருகே உள்ள பெருமாள்சேரி என்ற இடத்தில் அகதிகள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.