விஜயகாந்த் உத்தரவுப்படி ஜெ. படம் கிழிப்பு: கைது செய்யப்பட்ட 13 தேமுதிகவினருக்கு 15 நாள் ஜெயில்!!
தஞ்சாவூர்: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உத்தரவுப்படி பேருந்து நிழற்குடையில் இருந்த முதல்வர் ஜெயலலிதா படத்தை கிழித்ததால் கைது செய்யப்பட்ட 13 தஞ்சை தேமுதிகவினரை 15 நாள் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே தேமுதிகவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் 100 அதிமுகவினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தஞ்சாவூரில் டெல்டா விவசாயிகளுக்கும் மழை நிவாரணம் வழங்கக் கோரி தேமுதிகவினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டார்.
அவர் ஆர்ப்பாட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும் போது தமக்கு எதிரே இருந்த பேருந்து நிழற்குடையில் முதல்வர் ஜெயலலிதா படம் இருப்பதை கண்டு கடுப்பாகிப் போய் அதை கிழிக்க சொனனர். இதனைத் தொடர்ந்து தேமுதிகவினரும் அதை கிழித்தனர்.
இந்த செய்தியைக் கேள்விபட்ட அதிமுகவினர் கொந்தளித்து போயினர். தஞ்சாவூர் முழுவதும் தேமுதிகவினர் வைத்திருந்த பேனர்கள், கட்சி கொடிகளை அவர்கள் தீயிட்டு எரித்தனர்.
கும்பகோணத்தில் தேமுதிகவினர் சென்ற வாகனத்தை வழிமறித்து அடித்து உதைத்தனர். அந்த வாகனத்தில் இருந்த அதிமுகவினரை ஓட ஓட விரட்டி அடித்தனர் அதிமுகவினர்.
இந்நிலையில் பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்ததாக விஜயகாந்த் உட்பட 50 பேர் மீது எம்.எல்.ஏ. ரங்கசாமி, மாநகராட்சி ஆணையர் குமார் ஆகியோர் தஞ்சை போலீசில் புகார் கொடுத்தனர். இந்த புகாரில் அடிப்படையில் தேமுதிக தஞ்சாவூர் நகர செயலர் அடைக்கலம் உட்பட 13 பேரை போலீசார் இன்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் தஞ்சை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரையும் 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தற்போது இந்த வழக்கில் தம்மையும் கைது செய்து சிறையில் அடைப்பார்களோ என்று அஞ்சிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். இதனிடையே தேமுதிகவினர் கொடுத்த புகாரின் பேரில் அதிமுகவினர் 100 பேர் மீது தஞ்சாவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.