ஆரக்கிள் கொடுத்த அடுத்த ஷாக்.. ஐஐடி, என்ஐடி மாணவர்கள் கண்ணீர்!
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள் இந்தியாவின் முன்னணி பொறியியல் கல்லூரிகளில் வழங்கப்பட்டிருந்த கேம்பஸ் ப்ளேஸ்மெண்ட் மற்றும் ப்ரீ-ப்ளேஸ்மெண்ட் வேலைவாய்ப்பு ஆஃபர்களை ரத்து செய்துள்ளது. இது இந்திய ஐடி துறையிலும், மாணவர் வட்டாரங்களிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகளவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப வளர்ச்சி வேகமெடுத்து வரும் சூழலில், பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. இந்தியாவில் கல்லூரிகளில் நடத்தப்பட்ட கேம்பஸ் பிளேஸ்மென்ட் ஆஃபர்களையும் ரத்து செய்ய துவங்கியுள்ளது. இதைவிட முக்கியமான விஷயம், தற்போது ஆரக்கிள் ரத்து செய்யப்பட்டது என்ஐடி, ஐஐடி கல்லூரிகள் படித்த, படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஆஃபர்கள்.

உலகளவில் சுமார் 30,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்த ஆரக்கிள் நிறுவனத்தின் செலவுக் கட்டுப்பாடு மற்றும் தொழில்துறை மறுசீரமைப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வரும் வேளையில், இதன் ஒரு பகுதியாக தற்போது இந்தியாவில் அதிகப்படியான சம்பளத்துடன் வேலைவாய்ப்பு பெற்றிருந்த நூற்றுக்கணக்கான இளம் பொறியாளர்களின் வேலைவாய்ப்பை ரத்து செய்துள்ளது.
இந்த வேலைவாய்ப்பு ரத்து நடவடிக்கையால் என்ஐடி வாரங்கல், விஎன்ஐடி நாக்பூர், ஐஐடி ரூர்க்கி, ஐஐடி ஹைதராபாத் மற்றும் ஐஐடி (பிஹெச்யூ) வாராணசி உள்ளிட்ட பல முன்னணி கல்லூரிகள் மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ஆரக்கிள் நிறுவனம் பெரும்பாலும் மாணவர்களை தனது அப்ளிகேஷன் டெவலப்பர் மற்றும் சர்வர் டெக்னாலஜி அணிகளுக்காக புதிய பட்டதாரிகளை தேர்வு செய்திருந்தது. ஆனால், சமீபத்தில் "Oracle Health and Application Infrastructure" என்ற சர்வர் தொழில்நுட்ப பிரிவின் ஒரு முக்கிய வணிக பிரிவு மூடப்பட்டது.
இந்த மறுசீரமைப்பின் விளைவாக, அந்த பிரிவுக்காக இந்தியா முழுவதும் வழங்கப்பட்டிருந்த அனைத்து வேலைவாய்ப்பு ஆஃபர்களும் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவே தற்போதைய வேலைவாய்ப்பு ரத்து நடவடிக்கையின் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
ரூ.40 லட்சம் சம்பளம்
ஆரக்கிள் நிறுவனம் இந்த பணிகளுக்காக ஆண்டுக்கு ரூ.35 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரையிலான உயர்ந்த சம்பளத்தில் வேலைவாய்ப்புகளை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்போது அந்த வாய்ப்புகள் திடீரென ரத்து செய்யப்பட்டதால், பல மாணவர்கள் தொழில்முறை சமூக வலைதளமான லிங்க்ட்இனில் தங்களது சோகத்தை பகிர்ந்து வருகின்றனர். பலரும் புதிய வேலை வாய்ப்புகளை தேடி வருவதாகவும் பதிவுகள் வெளியிட்டு வருகின்றனர்.
இந்திய மாணவர்களுக்கு எச்சரிக்கை மணி
ஆரக்கிள் எடுத்துள்ள இந்த முடிவு, வெறும் ஒரு நிறுவனத்தின் நடவடிக்கையாக மட்டும் இல்லை. உலகளாவிய தொழில்நுட்ப மாற்றங்கள் இந்திய இளைஞர்களின் வேலைவாய்ப்பு அமைப்பையும் நேரடியாக பாதிக்க தொடங்கியுள்ளதற்கான முக்கிய சிக்னலாக இது பார்க்கப்படுகிறது.
இனி மாணவர்கள் வெறும் கேம்பஸ் ப்ளேஸ்மெண்ட் மீது மட்டும் நம்பிக்கை வைக்காமல், AI, கிளவுட், சைபர் பாதுகாப்பு, டேட்டா இன்ஜினியரிங் போன்ற எதிர்கால தொழில்நுட்ப திறன்களில் தங்களை தொடர்ந்து மேம்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications