“மன்னார்குடியை TRB ராஜாவுக்கு விட்டுக் கொடுத்திருக்க வேண்டும்..” வருத்தத்துடன் பேசிய MLA காமராஜ்
சென்னை: டி.ஆர்.பி.ராஜா வருத்தப்படுவார் எனத் தெரிந்திருந்தால் மன்னார்குடியில் நான் போட்டியிட சீட் கேட்டிருக்கவே மாட்டேன் என அமமுக எம்.எல்.ஏ காமராஜ் தெரிவித்துள்ளார். மன்னார்குடி தொகுதியை டிஆர்பி ராஜாவுக்கு விட்டுத்தந்திருக்க வேண்டும் என எம்.எல்.ஏ காமராஜ் பேசியிருப்பது வைரலாகி வருகிறது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இடம்பெற்றது. அக்கட்சி சார்பில் மன்னார்குடி தொகுதியில் போட்டியிட்ட எஸ்.காமராஜ் மட்டுமே வெற்றி பெற்றார். அங்கு திமுக அமைச்சராக இருந்த டி.ஆர்.பி.ராஜா 1,566 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அமமுக சார்பில் வெற்றி பெற்ற ஒரே ஒரு எம்.எல்.ஏவான காமராஜ், தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தார். இதனால் அமமுகவில் இருந்து அவரை நீக்கினார் தினகரன்.

அண்மையில் அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ காமராஜ் மன்னார்குடி தொகுதியில் சட்டமன்றத் தேர்தலில் பணியாற்றிய நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா சில இடங்களில் பேசும்போது வருத்தப்பட்டு பேசினார்.
மன்னார்குடியில் தோற்ற நிலையில் தொகுதியில் நன்றி தெரிவிக்கும்போது டிஆர்பி ராஜா அழுதார். எனக்கே அது சங்கடமாக இருந்தது. உடனே நான் அவருக்கு ஃபோன் போட்டு பேசினேன். அப்போது நீங்கள் வருத்தப்பட்டு பேசியதைப் பார்த்தேன். இப்படி பேசுவதை கண்டிருந்தால் கண்டிப்பாக மன்னார்குடி தொகுதியில் சீட் வேண்டாம் என சொல்லியிருப்பேன். தயவுசெய்து வருத்தப்படாதீர்கள் என கூறினேன்.
மேலும் மன்னார்குடியில் உங்களுக்கும் எங்களுக்கும் அரசியலுக்கு அப்பாற்பட்ட உறவு அப்படியே நீடிக்கட்டும். இன்னும் 100 ஆண்டுகாலம் ஆனாலும் நீங்கள் செய்த பணிகள் மாதிரி வராது. நான் 5 ஆண்டுகாலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் இங்கு செய்யப்பட்ட பணிகள் டிஆர்பி ராஜா கொண்டு வந்த பணிகள் என்றுதான் இருக்கும். அதில் எந்த மாற்றமும் இருக்காது. அதனால் நீங்கள் இனிமேல் சங்கடப்பட வேண்டாம் எனக் கூறினேன்.
அதுமட்டுமல்லாமல் எனக்கு வாழ்த்து தெரிவித்த அவருக்கு நன்றி தெரிவித்தேன். டிஆர்பி ராஜா நிறைய திட்டங்களை கொண்டு வந்தார். வைகாசி மாதத்தில் மன்னார்குடி எம்.எல்.ஏ அலுவலகம் திறக்கப்படும். அங்கு ஒரு ஊழியர் பணியமர்த்தப்பட்டார். நான் ஊரில் இருக்கும்போது தினமும் காலையில் 1 மணி நேரம் அலுவலகத்தில் இருப்பேன்" எனத் தெரிவித்துள்ளார்.
மன்னார்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான டிஆர்பி ராஜா குறித்து தற்போதைய எம்எல்ஏ காமராஜ் பெருமையாகப் பேசியிருப்பது அரசியல் களத்தில் கவனம் ஈர்த்துள்ளது.












Click it and Unblock the Notifications