காம்ப்ளானில் வண்டு.. வேடசந்தூர் மருந்து கடையில் ஆய்வு செய்த அதிகாரியை தாக்கிய 3 பேர் கைது!
வேடசந்தூர்: வேடசந்தூரில் காம்ப்ளானில் வண்டு இருந்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து மருந்து கடை ஒன்றில் ஆய்வு செய்த அரசு அதிகாரியைத் தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருத்துவ நிர்வாகத்துறை நியமன அலுவலரான சாம்இளங்கோவிடம் கிட்டயகவுண்டன்பட்டியை சேர்ந்த மயில்வாகனன் என்பவர் ஒரு புகார் கொடுத்தார்.
அதில், வேடசந்தூரில் வடமதுரை சாலையில் உள்ள ஒரு மருந்து கடையில் காம்ப்ளான் பாக்கெட் வாங்கியதாகவும் அதில் வண்டுகள், பூச்சிகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து சம்மந்தப்பட்ட மருந்து கடையில் பரிசோதனை செய்ய அதிகாரி சாம்இளங்கோ மற்றும் ஊழியர்கள் சென்றனர். அப்போது கடை உரிமையாளர் அங்கு இல்லை.
பின்னர் ஆய்வு செய்ய இருப்பதால் கடையின் ஷட்டரை இறக்கி விடுமாறு அதிகாரிகள் கூறினர். இதையடுத்து கடை ஊழியர்கள் உரிமையாளிடம் செல்போனில் பேசினர். உடனடியாக உரிமையாளர் மாணிக்கம், அவரது மகன் தங்கராஜ் ஆகியோர் கடைக்கு வந்தனர்.
அவர்கள் அதிகாரிகளை பரிசோதனை செய்ய விடாமல் தடுத்து தாக்கினர். இதையடுத்து அரசு அதிகாரிகள் போலீசில் புகார் செய்தனர். உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அதிகாரிகளை மீட்டுச்சென்றனர்.
பின்னர் அரசு அதிகாரிகளைத் தாக்கியதாக கடை உரிமையாளர் மாணிக்கத்தின் உறவினர்கள் தங்கராஜ், தண்டபாணி, சீனிவாசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.