"சுந்தரா டிராவல்ஸ்" ராதாவுக்கு.. ரவுடி போல "மாறு குரலில்" கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது!
சென்னை: சுந்தரா டிராவல்ஸ் நடிகை ராதாவுக்கு சிறையில் இருக்கும் ரவுடியின் குரலில் பேசி கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் செங்கல்பட்டில் வைத்துக் கைது செய்துள்ளனர்.
கைதான நபரின் பெயர் அந்தோணி பெனடிக். இவர் ஏன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி வைரத்தின் குரலில் பேசி மிரட்டினார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுந்தரா டிராவல்ஸ் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ராதா. இப்போது அவர் எந்தப் படத்திலும் நடிப்பதில்லை. இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் பைசூல் என்ற தொழிலதிபர் மீது புகார் கொடுத்தார். அதில், பைசூல் தனக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி, ரூ.20 லட்சம் மோசடி செய்ததாகவும், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி பலமுறை உடல்ரீதியான தொடர்பு வைத்துக்கொண்டதாகவும், இருவரும் கணவன், மனைவி போல ஒரே வீட்டில் கடந்த 6 ஆண்டுகள் வாழ்ந்ததாகவும் கூறியிருந்தார். மேலும், தன்னை ஆபாசமாக அவர் படம் எடுத்து வைத்துள்ளதாகவும் ராதா குற்றம் சாட்டியிருந்தார். பின்னர் இந்தப் பிரச்சினை ஓய்ந்தது.

ராதாவிடமிருந்து எனது கணவரை மீட்டுத் தாருங்கள்
இந்த நிலையில் சமீபத்தில் இன்னொரு பிரச்சினை கிளம்பியது. ராதாவிடம் இருந்து தனது கணவரை மீட்டுத்தரக் கோரி சென்னையைச் சேர்ந்த உமாதேவி என்ற பெண் போலீசில் புகார் அளித்தார். சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் உமாதேவி. இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் அவர், சுந்தரா டிராவல்ஸ் படத்தில் நடித்த ராதா தனது கணவரை தன்னிடம் இருந்து பிரிக்கப் பார்ப்பதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

உமாதேவி கணவர் முனிவேல்
உமாதேவின் கணவர் முனிவேல் அதிமுகவை சேர்ந்தவர். அவர் கோடம்பாக்கம் வட்ட துணை செயலாளராக உள்ளார். இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைரம் என்ற ரவுடி தன்னை தொலைபேசியில் மிரட்டியதாக நடிகை ராதா போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புதிய புகார் கொடுத்தார். அதில், தனக்கு வந்த செல்போன் அழைப்பில், புழல் சிறையில் இருந்து பிரபல ரவுடி வைரம் பேசுவதாகவும், அப்போது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார்.

ரவுடி வைரம் மனைவி லீனா
இதையடுத்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த ரவுடி வைரத்தின் மனைவி லீனா இந்தப் புகாரை மறுத்து பதில் மனு தாக்கல் செய்தார். அதில் தனது கணவர் அதுபோல செய்யக் கூடியவர் அல்ல. மேலும் அவர் தற்போது சிறையில் இருக்கிறார். சிறையிலிருந்து எப்படி போனில் பேச முடியும் என்றும் அவர் கேட்டிருந்தார்.

அடுத்தடுத்து 3 பெண்கள்
இப்படி அடுத்தடுத்து இந்த மூன்று பெண்களும் கொடுத்த புகார்களால் கமிஷனர் அலுவலகம் களேபரமானது. பரபரப்பும் ஏற்பட்டது. இந்த நிலையில் ராதா கொடுத்த புகாரை போலீஸார் விசாரித்து வந்தனர். அதில்தான் தற்போது அந்தோணி பெனடிக் என்பவர் சிக்கியுள்ளார்.

அந்தோணி பெனடிக்
செங்கல்பட்டைச் சேர்ந்த அந்தோனி பெனடிக் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் வைரம் போல போனில் பேசியுள்ளார் என்று கூறப்படுகிறது. இவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இவர் ஏன் ராதாவை மிரட்டினார் என்றும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications