18 ரூபாய்க்காக ஒரு வாதம்.. பெண் போலீஸின் செயலால் முகம் சுளித்த பயணிகள்.. பஸ் ஊழியர்கள் போராட்டம்
போக்குவரத்து ஊழியர்கள் மீது போலீசாரின் தாக்குதலை கண்டித்து வேலைநிறுத்தம் நடத்தப்பட்டது.
Recommended Video
திருப்பத்தூர்: இலவச வியாதி நாடு பூரா பரவி கிடக்கு. அதுக்கு தமிழ்நாடும் விதிவிலக்கல்ல என்பதன் உதாரணம்தான் இது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரிலிருந்து மானாமதுரைக்கு செல்லும் பஸ்ஸில் ஒரு பெண் போலீஸ் சீருடையில் ஏறினார். அவர் பெயர் கிருபாராணி, திருவாடானையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீஸாக பணியாற்றி வருபவர். பஸ் கிளம்பியது. எல்லோரிடமும் டிக்கெட் வாங்கி கொண்டு வந்த கண்டக்டர் முருகானந்தம் பெண் போலீசிடமும் டிக்கெட் எடுக்க சொன்னார். ஏதோ கேட்க கூடாத கேட்டுவிட்டது போலவும் செய்யக்கூடாததை செய்துவிட்டதுபோலவும் கண்டக்டரை பார்த்தார். பிறகு, 'நான் போலீஸ். போலீஸ்காரர்கள் பஸ்களில் டிக்கெட் எடுக்காமல்தான் சென்று வருகிறோம், நீங்கள் என்ன புதிதாகக் கேட்கிறீர்கள்?' என்றார். 'நீங்கள் வெளி மாவட்ட போலீஸார், கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும்' என்றார் முருகானந்தம்.
பயணிகள் வலியுறுத்தல்
இதனால் கோபமடைந்த அந்த பெண் கண்டக்டர் முருகானந்ததிடம் வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்கிவிட்டார். கண்டக்டரோ தன் கடமையைதான் செய்வதாக வலியுறுத்தியே வந்தார். ஆனாலும் அந்த பெண் போலீஸ் டிக்கெட் எடுக்கவே இல்லை. வாக்குவாதம் முற்றிவிட்ட காரணத்தினால் டிரைவர் பஸ்ஸை ஒட்டுவதை நிறுத்திவிட்டார். பஸ் நின்றுவிடவும் மற்ற பயணிகள் எல்லாம் டிக்கெட் எடுக்கும்படி பெண் போலீசிடம் சொல்லினர். எல்லோரும் தனக்கு எதிராக திரும்பியதை கண்ட போலீஸ் கிருபாராணி, ரூ.18 கொடுத்து ஒருவழியாக வாங்கினார். வண்டி நின்றது. முதல்வேலையாக, மானாமதுரை எஸ்ஐயிடம் சென்ற அவர், அரசுப் பேருந்தில் டிக்கெட் எடுக்க வலியுறுத்தியது குறித்து புகார் அளித்தார்.
மருத்துவமனையில் அனுமதி
இதனிடையே, பணிமுடிந்து பணிமனையில் டிரைவர் செந்தில்குமாரும், கண்டக்டர் முருகானந்தமும் தூங்கிக் கொண்டிருந்தனர். அவர்களை எழுப்பிய மானாமதுரை போலீசார் காவல்நிலையம் அழைத்து சென்று சரமாரி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த விஷயத்தை இன்று காலை கேள்விப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் காவல்நிலையம் சென்று காயமடைந்த இருவரையும் மீட்டு, மானாமதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுடள்ளனர்.
ஊழியர்கள் போராட்டம்
டிரைவரும், கண்டக்டரும் தாக்கப்பட்டதை கண்டித்தும், எஸ்.ஐ. மற்றும் போலீசார் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை கோரியும், சிவகங்கை, மானாமதுரை கிளை போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று காலை வேலைநிறுத்த போட்டத்தில் ஈடுபட்டனர். இதனை கேள்விப்பட்டு திருப்பத்தூரிலும் பேருந்துகளை இயக்க வேலைநிறுத்தம் நடைபெற்றது. இதையறிந்த திருப்பத்தூர் பணிமனையைச் சேர்ந்த போக்குவரத்து ஊழியர்களும் பேருந்துகளை இயக்க மாட்டோம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆங்காங்கே சாலை மறியலும் நடைபெற்றது. பின்னர் தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுப்பதாக, சிவகங்கை டிஎஸ்பி இளங்கோ உறுதியளித்ததன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால் பேருந்துகளை 2 மணி நேரம் இயக்க மறுத்ததால் பொதுமக்கள்தான் அதிகமாக தவித்து விட்டனர்.
எல்லாத்துக்கும் சலுகையா?
அரசு துறையில் பொறுப்புள்ள பணியில் இருந்துகொண்டு, சிறிய சிறிய விஷயத்துக்கெல்லாம் இலவசங்களையும், சலுகைகளையும் எதிர்பார்ப்பது நியாயம் இல்லை. இப்படி சுயநலத்தோடு தங்கள் துறை சம்பந்தப்பட்ட விஷயம் என்றால் உடனடியாக களம் இறங்கி செயல்படும் அக்கறை பிற துறைகள் மீதும் காவல்துறைக்கு இல்லாதது ஏன்? என கேள்வி எழுகிறது. பொது மக்களுக்கு ஒரு சட்டம், காவல் துறையினருக்கு ஒரு சட்டம் என்ற நிலையில் இருந்து முதலில் காவல் துறை வெளியே வரவேண்டும். சக அரசு துறை ஊழியர்களுக்கு மதிப்பளித்து அவர்களின் பணிக்கும் ஒத்துழைப்பு கொடுப்பது அவசியம்.