முள்ளிவாய்க்கால் முற்றம் நினைவுச்சுடர் கொண்டு சென்றவர்கள் கைது
நெல்லை: இலங்கை முள்ளிவாய்க்காலில் நடந்த படுகொலை சம்பவத்தை நினைவுப்படுத்தும் வகையில் தஞ்சையில் அமைய உள்ள நினைவேந்தல் முற்றத்துக்கான நினைவு சுடர் பயணத்தில் ஈடுபட்டவர்களை தமிழக காவல்துறை கைது செய்துள்ளது.
ஈழ தமிழர் படுகொலை சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில் தஞ்சையை அடுத்த விளார் என்ற இடத்தில் நினைவேந்தல் முற்றம் அமைக்கும் பணிகள் நடைபெற்றன. இந்த பணிகள் முடிவடைந்து வரும் 8 ஆம் தேதி அதனை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு தமிழ் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் முயற்சியில் அமைக்கப் பெற்றுள்ள இந்த நினைவிடத்திற்கு நினைவுச் சுடரை கொண்டு செல்லும் பயணம் இன்று தொடங்கியது.
இந்த சுடர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, நினைவிடம் அமைந்துள்ள இடத்திற்கு 8 ஆம் தேதி கொண்டு செல்லப்பட்டும். இந்த சுடரை பழ.நெடுமாறன், நல்லக்கண்ணு ஆகியோர் பெற்றுக்கொள்வதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி, சென்னையில் ஈழ கவிஞர் காசி ஆனந்தன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ் பயணத்தை தொடங்கி வைத்தார். அதேபோல், நீலகிரி, விருதுநகர், இடிந்தகரை உள்ளிட்ட 4 இடங்களில் இருந்து நினைவுச் சுடர் கொண்டு செல்லும் நிகழ்ச்சி இன்று இடிந்தகரையில் தொடங்கியது.
இடிந்தகரையில், பெ.மணியரசன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் சுப.உதயகுமார் சுடர் பயணத்தை தொடங்கி வைத்தார். இடிந்தகரையில் அணுஉலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பெண்கள் உள்பட 500க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டு ஊர் எல்லை வரை நடை பயணமாக வந்து வழியனுப்பி வைத்தனர்.
சுடர் பயணம் நெல்லை மாவட்டத்தைக் கடந்து குமரி மாவட்ட எல்லையில் உள்ள சின்னமுட்டம் செக்போஸ்ட் அருகே போலீசாரால் நிறுத்தப்பட்டது. பின்னர் சுடரை ஏந்திச் சென்ற 9 பேரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் வைத்தனர்.
தமிழகத்தில் 4 இடங்களிலும் இதேபோல் போலீசார் கெடுபிடியாக நடந்து கொண்ட சம்பவம், தமிழ் உணர்வாளர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.












Click it and Unblock the Notifications