பல்லாவரம் பள்ளி மாணவி பலாத்கார விவகாரம்... வதந்தி பரப்பியதாக 3 பேரிடம் போலீஸ் விசாரணை
சென்னை: பல்லாவரம் தனியார் பள்ளி வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதாக பரவிய வதந்தி தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த மூன்று பேரைப் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுமார் நான்காயிரத்திற்கும் அதிகமான மாணவிகள் படித்து வரும் பல்லாவரத்தில் உள்ள புனித தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கட்டிட வேலை நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்தவாரம் அப்பள்ளி மாணவி ஒருவர் கட்டிடத் தொழிலாளர்களால் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதாகவும் அதைப் பள்ளி நிர்வாகம் மூடி மறைப்பதாகவும் வதந்தி பரவியது.
இதனால், மூன்று தின பள்ளி விடுமுறையைத் தொடர்ந்து நேற்று முன்தினம் திறக்கப்பட்ட பள்ளியின் முன்பு ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், பள்ளி வளாகத்தில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை. மாணவிகள் யாரும் மாயமாகவில்லை எனத் தொடர்ந்து பள்ளி நிர்வாகம் மறுத்து வந்தது.
வதந்தி...
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் உயரதிகாரிகள் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தினார்கள். அதனைத் தொடர்ந்து மாணவி கொல்லப்பட்டதாக வெளியான தகவல் வதந்தி என போலீசார் தெரிவித்தனர்.
விடுமுறை...
இதற்கிடையே பள்ளியின் கேட்டைத் தாண்டி உள்ளே நுழைந்த பெற்றோரால் பரபரப்பு ஏற்பட்டது. லேசான தடியடி மூலம் பெற்றோரை போலீசார் கலைந்து போகச் செய்தார்கள். பின்னர் பள்ளிக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. தங்களுடைய குழந்தைகளை அழைத்துக் கொண்டு பெற்றோர் கலைந்து சென்றனர்.
பலத்த பாதுகாப்பு....
நேற்று பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இன்று வழக்கம் போல் பள்ளி மீண்டும் நடைபெற்றது. அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் பள்ளியின் முன்பு சுமார் 20 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வதந்தி பரப்புபவர்களை கண்காணிக்க பள்ளி நுழைவு வாயில் அருகே 2 கண்காணிப்பு காமிராக்களை போலீசார் பொருத்தி இருக்கிறார்கள்.
மடிப்பாக்கம் மாணவி...
இதற்கிடையே, பள்ளி வளாகத்தில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மாணவி என புகைப்படம் ஒன்று வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கில் வலம் வந்தது. இது தொடர்பாக போலீஸ் நடத்திய விசாரணையில் அந்த புகைப்படத்தில் உள்ள மாணவி மடிப்பாக்கத்தில் படித்து வருவது தெரிய வந்தது.
விசாரணை...
பள்ளிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துவதற்காக இத்தகைய வதந்தி பரப்பப் பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்நிலையில், இந்த வதந்தியைப் பரப்பியதாக பல்லாவரத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் பிடித்து உள்ளதாகவும், அவர்களிடம் ரகசிய இடத்தில் விசாரணை நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications