சேகர் ரெட்டியின் சிறைக் காவல் மார்ச் 14 வரை நீட்டிப்பு
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சேகர் ரெட்டி உள்ளிட்ட மூவரின் சிறைக் காவல் மார்ச் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் சேகர் ரெட்டி, சீனிவாசலு மற்றும் பிரேம்குமார் உள்ளிட்ட மூவரின் சிறைக் காவலை வரும் மார்ச் 14-ஆம் தேதி நீட்டித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
சென்னை தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீட்டில் கடந்த டிசம்பர் 8-ம் தேதி வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையில் அவரது வீட்டில் இருந்து ரூ. 136 கோடி பணமும், 179 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் ரூ.34 கோடி புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளும் அடங்கும்.
இதையடுத்து சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக சேகர் ரெட்டி, அவரது உறவினர் சீனிவாசலு, ஆடிட்டரும், நண்பருமான பிரேம்குமார் உள்ளிட்டோர் கடந்த டிசம்பர் மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக விசாரணை நடத்த நீதிமன்ற காவல் கோரி சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அந்த வகையில் அவரை சிபிஐ அதிகாரிகள் சிறைக் காவலில் எடுத்து மூவரிடமும் விசாரணை நடத்தி வந்தனர். குற்றம்சாட்டப்பட்ட அந்த 3 பேரது சிறைக் காவலுக்கு நீதிமன்றம் விதித்த காலம் முடிவடைந்தநிலையில் அதை நீட்டிக்க அனுமதி கோரி சென்னனை சிபிஐ நீதிமன்றத்தில் அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர்.
அந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் சேகர் ரெட்டி உள்ளிட்ட மூவரின் சிறைக் காவலை வரும் மார்ச் 14-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தனர்.