அதெல்லாம் வேற யார்ட்டயாவது வச்சுக்கோ.. சி.பி.ராதாகிருஷணனிடம் எகிறிய 'டிசி'!
கோவை: கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனைப் பார்த்து அதையெல்லாம் வேற யாரிடமாவது வச்சுக்கோ என்று துணை கமிஷனர் ஒருவர் ஒருமையில் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சி.பி.ராதாகிருஷணன் கோவை லீ மெரிடியன் ஹோட்டலில் தங்கியிருந்தார். அவரைப் பார்க்க கட்சிக்காரர்களும், விஜய் ரசிகர் மன்றத்தினரும் வந்தனர். ஆனால் யாரையும் உள்ளே விடவில்லை போலீஸார்.
இதையடுத்து வெளியே வந்தார் ராதாகிருஷணன். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த திருப்பூர் போலீஸ் துணை கமிஷனர் சுந்தரவடிவேலுவிடம் அனைவரையும் உள்ளே விடுமாறு கூறினார்.
ஆனால் அதை ஏற்க மறுத்தார் சுந்தரவடிவேலு. அத்தோடு நில்லாமல், குஜராத்திலிருந்து ஐஜியைச் சொல்லச் சொல்லுங்கள் விடுகிறேன் என்றார் நக்கலாக.
அதைக் கேட்டுக் கோபமடைந்த ராதாகிருஷ்ணன், குஜராத் ஐஜிக்குப் போன் போடுகிறேன். உள்ளே விடனும் என்றார் கோபமாக. அதற்கு சுந்தரவடிவேலு, எனக்கு நேரடியாக உத்தரவு போட உங்களுக்கு உரிமையில்லை. என்னோட வேலையை பார்க்க எனக்கு தெரியும். நீ வேற யார் கிட்டயாவது வச்சுக்க.. என்று கூறவே கூடியிருந்த பாஜகவினர் கொந்தளித்து விட்டனர்.
சுந்தரவடிவேலுவிடம் ஆக்ரோஷமாக வாதம் புரிந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.