சேலத்தில் மாணவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றம்... பந்தல்கள் அகற்றம்.. பரபரப்பு
சேலம்: சேலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்களை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மீண்டும் மாணவ்ரகள் கூடாதபடி பாதுகாப்பு அரண்களை அமைத்து ஏராளமான போலீசார் அங்கு குவிந்துள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் இயற்ற வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இளைஞர்கள் பொது மக்கள் தீவிரப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அனைத்து போராட்டக் களத்திலும் இன்று காலை குவிந்த காவல்துறையினர் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்றும் தரதரவென இழுத்துச்சென்றும் வெளியேற்றினர்.

சேலத்தில் அதிரடியாக இறங்கிய போலீசார் போராட்டக் களத்தில் இருந்தவர்களை வெளியேறுமாறு அறிவுறுத்தினர். இதற்கு போராட்டக் குழுவினர் மறுத்ததால் அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.
வர மறுத்தவர்களை தரதரவென இழுத்துச்சென்றனர். பலரை குண்டுக்கட்டாக துக்கிச்சென்றும் போராட்டக் களத்தை காலி செய்தனர்.
மேலும் அங்குப் போடப்பட்டிருந்த பந்தல்களையும் போலீசார் அவசர அவசரமாக அகற்றினர். மீண்டும் மாணவர்கள் அங்கு கூடாபடி அரண்களையும் போலீசார் அமைத்தனர். போராட்டம் மீண்டும் நடந்துவிடாமல் தடுக்கும் வகையில் ஏராளமான போலீசாரும் அங்கு குவிந்துள்ளனர்.
இதேபோல் சேலத்தில் கடந்த வியாழக்கிழமை முதல் மாணவர்களின் பிடியில் இருந்த ரயிலையும் போலீசார் மீட்டனர். போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications