சென்னையில் ரவுடி ஆனந்தன் சுட்டுக் கொல்லப்பட்டது எப்படி? கூடுதல் கமிஷனர் சாரங்கன் விளக்கம்
உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் போலீசார் மீது ஆனந்தன் தாக்க முயன்றார். எனவே, உதவி கமிஷனர் ஒரு ரவுண்ட் சுட்டார் என்று விளக்கம் அளித்துள்ளார் கூடுதல் போலீஸ் கமிஷனர் சாரங்கன்.
Recommended Video
சென்னை: சென்னையில் ரவுடி ஆனந்தன் சுட்டுக் கொல்லப்பட்டது எப்படி? என்பது குறித்து கூடுதல் ஆணையாளர் சாரங்கன் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார்.
சென்னை ராயப்பேட்டையில் நேற்று இரவு தகராறு செய்த ஆனந்தன் என்ற ரவுடியை போலீசார் பிடிக்க முயன்றபோது, அவர் சரமாரியாக தாக்கியதில் ராஜவேலு என்ற கான்ஸ்டபிள் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அப்போது, காவல்துறைக்கு சொந்தமான வாக்கி டாக்கியையும் ஆனந்தன் திருடிச் சென்றுவிட்டார்.
இதையடுத்து போலீசார் ஆனந்தனை தீவிரமாக தேடி வந்த நிலையில், அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் இன்று இரவு போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதுகுறித்து சம்பவ இடத்தை பார்வையிட்ட பிறகு கூடுதல் போலீஸ் கமிஷனர் சாரங்கன் நிருபர்களிடம் கூறியதாவது:
ஆனந்தன் பதுங்கியிருந்த இடத்திற்கு தனிப்படையினர் விரைந்து சென்று அவரை கைது செய்ய முற்பட்டனர். அப்போது, இளையராஜா என்ற சப்இன்ஸ்பெக்டரை ஆனந்தன் தாக்கிவிட்டு தப்பியோட முயன்றார்.
அப்போது, சரணடையுமாறு, உதவி கமிஷனர் வார்னிங் கொடுத்தார். ஆனாலும், ஆனந்தன் மேலும் தாக்கவே முற்பட்டார். உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் போலீசார் மீது ஆனந்தன் தாக்க முயன்றார். எனவே, உதவி கமிஷனர் ஒரு ரவுண்ட் சுட்டார். இதில் ஆனந்தன் காயமடைந்தார். உடனடியாக போலீசார் அவரை, தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதன் பிறகு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, ஆனந்தன் பலியானார்.
சப் இன்ஸ்பெக்டர் இளையராஜாவிற்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. ராஜவேலு தற்போது ஐசியூவில் உள்ளார். இருப்பினும் உயிருக்கு ஆபத்து இல்லை. என்கவுண்டர் பற்றி காவல்துறை விசாரணை மட்டுமின்றி, நீதித்துறை விசாரணையும் நடக்கும். அதற்கு தேவையான நடைமுறைகளை காவல்துறை செய்யும். இவ்வாறு சாரங்கன் தெரிவித்தார்.