மதுரையில் ரயில் மறியல்… ம.ந.கூ. தொண்டர்கள் மீது போலீஸ் தடியடி… கண்டித்து சாலை மறியல்
மதுரை: காவிரி பிரச்சனை தொடர்பாக மத்திய அரசைக் கண்டித்து மதுரையில் ரயில் மறியல் போராட்டம் நடத்த முயன்ற மக்கள் நலக் கூட்டணி தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
காவிரி நதி நீர் பிரச்சனையில் மத்திய அரசின் போக்கைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் இன்று தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. விவசாய சங்கங்கள் அறிவித்த இந்தப் போராட்டத்திற்கு திமுக, காங்கிரஸ், ம.ந.கூ, தமாகா உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவித்து அந்தந்த மாவட்டங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
#CauveryIssue: VCK stages 'Rail Roko' protest in Chennai. pic.twitter.com/BoXGs8TlMg
— ANI (@ANI_news) October 17, 2016
அந்த வகையில் மதுரையில் 500க்கும் மேற்பட்ட ம.ந.கூ. தொண்டர்கள் மதுரை ரயில் நிலையத்தில் ரயிலை மறித்து போராட்டம் செய்ய கட்டபொம்மன் சிலை அருகில் ஒன்று கூடினார்கள். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு மதுரை சந்திப்பு ரயில் நிலையம் உள்ள சாலைக்கு வந்தனர். அங்கு அவர்கள் இடை மறிக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இதனையடுத்து, ம.ந.கூ. தொண்டர்கள் தடுப்புக்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகளைத் தாண்டிச் செல்ல முயற்சி செய்தனர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசாரின் கட்டுக்கடங்காத போராட்டக்காரர்களை தடியடி நடத்தி கலைக்க போலீசார் முயற்சி செய்தனர். இந்தத் தடியடியில் ம.ந.கூ. தொண்டர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
போலீசாரின் இந்த அடாவடித்தனத்தைக் கண்டித்து போராட்டக்கார்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியலால் அந்தப் பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளனர்.