தூத்துக்குடி: சுபாஷ் பண்ணையார் கூட்டாளிகள் மீது குண்டு வீச்சு எதிரொலி- போலீசார் சோதனை
திண்டுக்கல் மாவட்டம் நந்தவனபட்டியில் 2011 ஜனவரி 10ம் தேதி தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் பசுபதி பாண்டியன் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தூத்துக்குடியை சேர்ந்த சுபாஷ் பண்ணையார் உள்பட 18 பேர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டனர்.
இந்த வழக்கின் விசாரணை திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு ஆஜாராகி விட்டு சுபாஷ் பண்ணையார் ஆதரவாளர்கள் 12 பேர் 2 கார்களில் திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது கொடை ரோடு அருகே கமலாபுரம் பிரிவில் டிப்பர் லாரி, கார், டூவீலரில் பயங்கர ஆயுதங்களுடனும், நாட்டு வெடிகுண்டுகளுடனும் 25 பேர் கொண்ட கும்பல் அவர்களின் கார்களை வழிமறித்து சராமரியாக நாட்டு வெடிகுண்டுகளை வீசியது.
வெடிகுண்டு கார் மீது படாமல் சாலையில் விழுந்து வெடித்தது. இந்த சம்பவத்தில் 12 பேரும் காயமின்றி தப்பினர்.
இது தொடர்பாக நெல்லை அருகே உள்ள ராமையன்பட்டியை சேர்ந்த கோவிந்தராஜ், விஜயபாண்டி, தச்சநல்லூரை சேர்ந்த எஸ்டேட் மணி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய 19க்கும் மேற்பட்டோர் தூத்துக்குடி மாவட்டத்தில் பதுங்கியுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில தனிப்படையினர் தூத்துக்குடி நகர் பகுதியில் முகாமிட்டுள்ளனர்.
தூத்துக்குடி தருவைகுளம் ரோட்டில் உள்ள சுனாமி காலனி, ஸ்ரீவைகுண்டம் சேரகுலம், எப்போதும் வென்றான், பொட்டல்காடு, ஓட்டப்பிடாரம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ளூர் போலீசாரின் உதவியோடு அவர்கள் தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் பிடிபட்டவர்கள் பயன்படுத்திய நாட்டு வெடிகுண்டுகள் ஸ்ரீவைகுண்டம் மற்றும் தூத்துக்குடி பகுதியில் தயாரிக்கப்பட்டவை என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் இது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.