"என் வாழைப்பழத்தை எப்படி சாப்பிடலாம்?”- உப்பு பெறாத விஷயத்திற்காக கட்டிப்புரண்ட எஸ்.ஐ, ஏட்டு!
திருச்சி: திருச்சியில் காவல்துறையைச் சேர்ந்த இரண்டு பேர் வாழைப்பழத்திற்காக கட்டிப்புரண்டு அடித்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது.
திருச்சி ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராதா மற்றும் டிரைவரான ஏட்டு சரவணன் ஆகியோர் கடந்த இரு நாட்களுக்கு முன்பு ஸ்ரீரங்கம் பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராதாவுக்கும், ஏட்டு சரவணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ரோந்து முடிந்து அடுத்தநாள் அதிகாலையில் சரவணன் வாங்கி வைத்து இருந்த வாழைப்பழத்தை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராதா எடுத்து சாப்பிட்டார்.
இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்து இருவரும் கட்டிபுரண்டு சண்டை போட்டனர். அப்போது அவர்கள் ஒருவருக்கொருவர் மாறி, மாறி கடித்து கொண்டனர். இதில் இருவரும் காயம் அடைந்தனர்.
இந்த சம்பவத்தை பார்த்த அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக மாநகர காவல்துறை அதிகாரி அருண், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராதா, ஏட்டு சரவணன் ஆகிய இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications