பாக். படகு வெடிப்பு எதிரொலி – ராமேஸ்வரம், பாம்பன் கடல் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு
ராமேஸ்வரம்: குஜராத்தில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகளின் படகு வெடித்துச் சிதறிய சம்பவத்தை தொடர்ந்து ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் கடல் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
பாகிஸ்தானில் இருந்து படகு மூலம் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைய முயன்றனர். குஜராத் அருகே அவர்கள் வந்த படகை, இந்திய கடற்படையினர் வழி மறித்தனர்.
அப்போது வெடிகுண்டு நிரம்பிய படகை தீவிரவாதிகள் வெடிக்கச் செய்தனர். இதில் படகு வெடித்து சிதறியது. அதில் இருந்த 4 தீவிரவாதிகளும் பலியானார்கள்.
குஜராத் சம்பவம் போன்று இலங்கையில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவாமல் தடுக்க, தமிழக கடலோரங்களில் இந்திய கடலோர காவல் படை மற்றும் தமிழக கடலோர காவல் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மண்டபம் கடலோர காவல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் உத்தரவின்படி ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் கடல் பகுதியில் 2 படகுகளில் 10க்கும் மேற்பட்ட போலீசார் ரோந்து சென்றனர்.
நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த விசைப்படகுகள், நாட்டுப் படகுகளை நிறுத்தி சோதனை செய்தனர். மீனவர்களின் அடையாள அட்டையையும் போலீசார் ஆய்வு செய்தனர்.