காவிரி மருத்துவமனையில் குவிந்த கருணாநிதி குடும்பத்தார்... போலீஸ் குவிப்பு
திமுக தலைவர் கருணாநிதி தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் கருணாநிதி குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வருகை புரிந்துள்ளனர்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் கருணாநிதி குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வருகை புரிந்துள்ளனர். இதனால் மருத்துவமனையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்னும் சில நிமிடத்தில், காவேரி மருத்துவமனை, கருணாநிதி குறித்து மூன்றாவது அறிக்கை வெளியிட இருக்கிறார்கள். இரண்டாவது நாளாக திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
தற்போது அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனாலும் மருத்துவமனைக்கு வெளியே பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில் தற்போது காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதி குடும்பத்தினர் வருகை புரிந்துள்ளனர். ஸ்டாலின், மு.க.அழகிரி, உதயநிதி ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் ஆகியோர் வருகை புரிந்துள்ளனர். மேலும் கனிமொழி, ராசாத்தி அம்மாள் ஆகியோரும் வருகை புரிந்துள்ளனர்.
அது மட்டுமில்லாமல் மற்ற கட்சி தலைவர்கள் அங்கு வந்து இருக்கிறார்கள். தமிழகம் முழுக்க எல்லா பகுதியில் இருந்தும், தொண்டர்கள் அங்கே கூடி வருகிறார்கள். இதனால் மருத்துவமனையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.