சென்னை லாட்ஜ்களில் விடிய விடிய போலீஸ் ரெய்டு!
சென்னை: சட்டசபைத் தேர்தல் பிரச்சாரம் முடிந்ததைத் தொடர்ந்து நேற்று மாலைக்கு மேல் சென்னையில் உள்ள விடுதிகளில் போலீஸார் ரெய்டு நடத்தினர்.
தமிழக சட்டசபைத் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. நாளை அரவக்குறிச்சி தவிர 233 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் தொகுதியைச் சேராத, வெளியூர்க்காரர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து நேற்று சென்னையில் உள்ள தங்கும் விடுதிகளில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
எழும்பூர், திருவல்லிக்கேணி, பெரியமேடு உள்ளிட்ட பகுதியில் 300க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் உள்ளன. இங்கு வழக்கமாக தங்குபவர்களை தவிர வேறு யாரேனும் தங்கியுள்ளனரா என போலீஸார் விசாரணை நடத்தினர். புதிதாக தங்கியுள்ளவர்கள் குறித்து பதிவேட்டில் குறித்துக் கொண்டனர்.
மேலும், தேர்தலின்போது பணப்பட்டுவாடா நடைபெறாமல் தடுக்க சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் இரவு முழுவதும் பணியில் ஈடுபட்டனர். நகரின் பல்வேறு பகுதிகளில வாகன தணிக்கையும் நடத்தப்பட்டது.
அதேசமயம், மிகவும் உள்ளடங்கிய பகுதிகளில் போலீஸ் கண்காணிப்பு இருந்ததாக தெரியவில்லை. எனவே அங்கு பணப் தடங்கல் இல்லாமல் பணப் பட்டுவாடா நடந்ததாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications