காங். அறக்கட்டளை மேலாளர் வீட்டில் போலீஸ் திடீர் ரெய்டு.... அடுத்து இளங்கோவனுக்கு 'குறி'
சென்னை: சென்னை காமராஜர் அரங்கத்தில் வேலைபார்த்த ஊழியர் வளர்மதி கொடுத்த புகார் அடிப்படையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளையின் மேலாளர் நாராயணன் வீட்டில் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
சென்னை அசோக்நகர் போலீஸ் பயிற்சி பள்ளி குடியிருப்பில் வசிப்பவர் ஆர்.வளர்மதி. இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த புகார் மனுவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளையின் ஒரு அங்கமான தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கத்தில் தொலைபேசி உதவியாளராக கடந்த 24 ஆண்டுகளாக வேலைபார்த்து வந்தேன். காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளைக்கு சொந்தமாக 120 கடைகள் உள்ளது. அந்த கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. வாடகையை நானும், மேலாளர் நாராயணனும் சேர்ந்துதான் வசூலிப்போம். 35 கடைகளை வாடகைக்கு எடுத்து நடத்தும் ஒரு நபர் அந்த கடைகளுக்கு பெயர் மாற்றம் கேட்டுள்ளதாகவும், இதற்கு ஒரு கடைக்கு ரூ.10 லட்சம் வீதம் ரூ.3 கோடி பணத்தை அந்த நபரிடம் வாங்கும்படியும், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், நாராயணனும் என்னை வற்புறுத்தினார்கள்.
நான் அவ்வாறு பணம் கேட்க முடியாது என்று கூறிவிட்டேன். இதனால் நான் மிரட்டப்பட்டேன். உருட்டுக்கட்டையால் தாக்கப்பட்டேன். எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என கூறியிருந்தார்.
இந்த புகார் மீது தேனாம்பேட்டை போலீசார் கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் நாராயணன் ஆகிய இருவர் மீதும் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று முன்ஜாமீன் பெற்றார்.
மேலாளர் நாராயணனிடம் தேனாம்பேட்டை போலீசார் ஏற்கனவே விசாரணை நடத்தினார்கள். மேலும் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டிலும் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையைத் தொடர்ந்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தக் கூடும் என தெரிகிறது.