சென்னையில் அதிர்ச்சி அளிக்கும் சம்பவம்... பூட்டிய வீட்டில் இருந்து 4 பெண்களின் அழுகிய உடல்கள் மீட்பு
சென்னை: சென்னையில் பூட்டிய வீட்டுக்குள் பெண்கள் 4 பேரின் உடல்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர் சீனிராஜ். சென்னை ராயப்பேட்டையில் உள்ள முத்து தெருவில் கடந்த 4 ஆண்டுகளாக, அவரது மனைவி சந்தனமீனா, மகள்கள் பவித்ரா, பரிமளா மற்றும் சினேகாவுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக வீட்டின் வெளிக்கதவு பூட்டிய நிலையிலேயே இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, வீட்டின் உரிமையாளர் வீடு பூட்டப்பட்டு இருப்பதற்கான காரணத்தை சீனிராஜிடம் கேட்டுள்ளார். அப்போது பதற்றம் அடைந்த சீனிராஜ் முன்னுக்கு பின்னாக பேசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே பூட்டிய வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், ராயப்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது, அங்கு அழுகிய நிலையில், சீனிராஜின் மனைவி மற்றும் மகள்கள் என 4 பேர் சடலமாக கிடந்துள்ளனர். இதையடுத்து சடலங்களை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவான சந்தனமீனாவின் கணவர் சீனிராஜை தேடி வருகின்றனர். மர்மமான முறையில் 4 பெண்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதால், அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications